2020 கொரோனா லாக்டவுன் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களுக்குத் தற்போது நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமும் அறிவித்து வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இதில் முக்கியமாகப் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகளில் வாயிலாகச் சிறு, குறு நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது புதிய லாக்டவுன் மூலம் ஒரு உற்பத்தி நிறுவனம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது தெரியுமா..? வாங்க பார்ப்போம்.
கோவை தொழிற்சாலை
தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தக நகரமாக விளங்கும் கோவை கணபதி பகுதியில் பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரத்திற்கான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ஒரு சிறு உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறார் 36 வயதான மணிராஜ். இந்தப் புதிய கொரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் காலையில் 9 மணிக்குத் துவங்கும் வர்த்தகம் இரவு வரையில் தொடர்வதாகக் கூறுகிறார் மணிராஜ். உண்மையில் என்ன பிரச்சனை.
ஜனவரி 2020 நிலை
ஜனவரி 2020ல் மணிராஜ் தனது உற்பத்தி தொழிற்சாலையில் சுமார் 12க்கும் அதிகமாக ஊழியர்களைக் கொண்டு வர்த்தகத்தை நடத்தி வந்தார். குறிப்பாகப் புதிய வர்த்தகம் கிடைப்பது, மூலப்பொருட்களின் நிலையிலான விலை அளவுகள், கொரோனா பாதிப்பு இல்லாத நிலை என அனைத்தும் சரியாகச் சென்றுகொண்டு இருந்தது.
மோசமான நிலை
ஆனால் தற்போது நிலை மொத்தமாக மாறியுள்ளதாக மணிராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு முன்பு என்னுடைய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பேச்சுவார்த்தை செய்தும், தொழிற்சாலையில் பணிகளை மேலாண்மை செய்வும், தரத்தை உயர்த்துவதற்கான பணிகளைச் செய்து வந்தேன். ஆனால் இப்போது நானே இயந்திரங்களை இயக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளேன், நிறுவனத்தை விட்டு வெளியே கூடச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது என மணிராஜ் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி, வர்த்தகம்
கொரோனா லாக்டவுன் வந்த பின்பு தொழிற்சாலையின் உற்பத்தி சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது, இதேபோல் மாதம் 8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலையில் தற்போது வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதேபோல் 40 வாடிக்கையாளர்கள் இருந்த இடத்தில் தற்போது வெறும் 15 வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என வருத்தத்துடன் கூறுகிறார் மணிராஜ்.
ஊழியர்களின் நிலை
12 பேர் பணியாற்றி வந்த தொழிற்சாலையில் 5 பேர் மார்ச் 2020 லாக்டவுன் காலத்தில் சொந்த ஊருக்குச் சென்றவர்கள் மீண்டும் பணிக்கு வர மறுப்பு தெரிவிக்கின்றனர். தற்போது புதிய கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்டு வரும் லாக்டவுன் காரணமாகவும் 3 பேர் வேலைக்கு வர மறுக்கின்றனர். இதனால் மொத்த தொழிற்சாலையும் 4 ஊழியர்கள் வைத்து நடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடன் சுமை
வர்த்தகம், உற்பத்தி, வருமானம் அனைத்தும் குறைந்த நிலையில் தற்போது கிடைக்கும் சிறு வருமானம் கூடக் கட்டிட வாடகை, கடனுக்கான வட்டி, மின்சாரக் கட்டணம், சம்பளம் ஆகியவற்றுக்குச் செலவிட வேண்டி இருப்பதால். புதிய வாடிக்கையாளர்கள் பிடித்தால் அதிக மூலப்பொருள் வாங்க வேண்டும் அதற்கான தொகை இல்லாத நிலையில் வர்த்தகம் விரிவாக்கத்தை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
முதலீடு அளவுகள்
இந்தத் தொழிற்சாலைக்காகச் சுமார் 70 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன், இயந்திரங்கள் வாங்கவும், கட்டிடத்திற்கு முன்பணம், பிற அடிப்படைத் தேவைகளுக்கு. இதுமட்டும் அல்லாமல் 10 முதல் 12 லட்சம் ரூபாயை மூலப்பொருட்களுக்காகச் செலவு செய்துள்ளேன்.
வங்கிகள் உதவி செய்யவில்லை
இந்தப் பணத்தில் சுமார் 90 சதவீதம் தனியார் நிதியியல் நிறுவனத்தில் கடனாகப் பெற்றுள்ளேன், கடனுக்குச் சுமார் 26 சதவீதம் வட்டி விதிக்கும் நிதி நிறுவனங்கள் இந்தக் கொரோனா காலத்திலும் எவ்விதமான உதவியும், சலுகையும் அளிக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார் மணிராஜ்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின்
இது மணிராஜ்-ன் நிலைமை மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் 90 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழிற்சாலைகளின் நிலை. குறிப்பாகக் கொரோனா காலத்தில் மூலப்பொருட்களின் விலை உயர்வு இந்நிறுவனங்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதேவேளையில் வர்த்தகம் மற்றும் வருமான சரிவு ஆகியவை பெரிய நிதியியல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் நிலை
கோவையில் மட்டும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் உள்ளது, இந்த நிறுவனங்களில் 10 முதல் 100 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். கோவை மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழிற்சாலைகளின் இன்றைய நிலை இதுதான்.