தமிழ்நாட்டில் பத்திர பதிவில் முக்கியமான ஒரு மாற்றம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் சாமானிய மக்கள் நீண்ட காலமாக சந்தித்து வந்த ஒரு பிரச்சினை முடிவுக்கு வர போகிறது. தமிழ்நாட்டில் பத்திரங்களை பதிவு செய்யும் போது அதன் அசல் பத்திரம் கொண்டு வருவது கட்டாயமாக இருந்தது. அசல் பத்திரம் இல்லாதபோது, ஆவணப்பதிவுகளை செய்ய இயலாத வகையில் உள்ள 34 சி என்ற பத்திர பதிவு சட்டம் நடைமுறையில் இருந்தது.
சொத்தை விற்பவர் (ஆவணத்தை நிறைவேற்றுபவர்) சார் பதிவாளர் அலுவலகத்தில் அசல் மூலப் பத்திரத்தை (Previous original document) சமர்ப்பிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட புதிய வில்லங்கச் சான்றிதழைச் (EC) சமர்ப்பிக்க வேண்டும். அசல் பத்திரம் தொலைந்துவிட்டால் காவல் துறையின் சான்றிதழ் மற்றும் நாளிதழ் விளம்பரம், அல்லது பரம்பரைச் சொத்தாக இருந்தால் வருவாய்த் துறையின் பட்டா ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பரம்பரை சொத்துகளுக்கு மூல பத்திரம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் மூல பத்திரம் கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்தை செல்லாது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும் என கோரி அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்க கூட்டமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, சொத்து உரிமைகளை பாதுகாப்பதற்கும், மோசடிகளை தடுப்பதற்கும் தனக்கு உள்ள அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றும் வகையில் பதிவுச்சட்டத்தில் 34 (சி) பிரிவை சேர்த்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது என கூறியுள்ளார்.
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் போலி விற்பனைப் பத்திரங்கள் பதிவு, ஒரே சொத்தை பலமுறை விற்பனை செய்தல், போலியாகத் தயாரிக்கப்பட்ட மூல ஆவணங்களைப் பயன்படுத்துதல், அடமான விபரங்களை மறைத்தல் போன்றவை தடுக்கப்பட்டு உள்ளன என கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு பதிவுச் சட்டத்திருத்தத்தின் பிரிவு 34 (சி) ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட முந்தைய விதி 55-ஏயை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியை தவிர வேறில்லை என்றனர்.
பதிவுச் சட்டத்தின் 34-சி பிரிவு என்பது, சம்பந்தப்பட்ட சொத்து பூர்வீகச் சொத்தாக இருந்து, அதன் அசல் ஆவணம் கிடைக்காத பட்சத்தில், வருவாய்த்துறையினால் வழங்கப்பட்ட பட்டாவை சமர்ப்பிக்காத வரை, அந்த பத்திரத்தைப் பதிவு செய்யவும், மறுக்கவும் துணைப்பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கிறது என கூறினர். இதனை நுணுக்கமாக ஆராயும்போது, ஒரு சொத்து பூர்வீகச் சொத்தா? இல்லையா? என்பது போன்ற உரிமையியல் சார்ந்த கேள்விகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் இது துணைப் பதிவாளருக்கு வழங்குகிறது. ஒரு சொத்து பூர்வீக சொத்தா அல்லது கூட்டுக் குடும்ப சொத்தா என்பது உண்மைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம் என தெரிவித்தனர்.
இதுவரை வெறும் நிர்வாகப் பணிகளை மட்டும் கவனித்து வந்த துணைப் பதிவாளர், இப்போது சொத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் மற்றும் பாதுகாக்கும் அதிகாரத்தை எவ்வாறு கையிலெடுக்க முடியும்? எனவே, சொத்துரிமை தொடர்பான கேள்விகளைத் தீர்மானிக்க துணைப் பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் இந்த பிரிவு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பிற்கும் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டிற்கும் எதிரானது என கூறினர்.
மேலும் அரசியலமைப்பின் 300-ஏ பிரிவின் கீழ் ஒருவரின் சொத்துரிமைக்கு தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை இந்த சட்டத்திருத்தம் விதிக்கிறது. இது, சொத்து மாற்றச் சட்டம்' மற்றும் 'ஒப்பந்தச் சட்டம்' போன்ற முக்கிய சட்டங்களின் விதிகளையும் மீறுவதுடன், அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மீறுவதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது என தெரிவித்தனர்.
இவற்றை கருத்தில் கொண்டு பதிவுச்சட்டத்தின் 34 சி பிரிவை சேர்த்து பிறப்பித்த சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, அசல் ஆவணங்களின்றியும் பத்திரப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டனர். எனவே இனி பொதுமக்கள் தங்கள் சொத்தின் அசல் ஆவணங்கள் இல்லை என்றாலும் அவற்றை பத்திர பதிவு செய்ய முடியும். இதனால் பத்திர பதிவுக்காக மூல பத்திர ஆவணங்களை தேடி அலையும் நிலை இனி கிடையாது.


Click it and Unblock the Notifications

