தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது. காலை 7 மணிக்கு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே ஏராளமான தொகுதிகளிலும் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களிப்பதை காண முடிகிறது.
குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலரும் காலையிலேயே வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதன் மூலம் மக்களும் ரசிகர்களும் திரளாக சென்று வாக்களிக்க வேண்டும், ஜனநாயக கடமையில் இருந்து மீற கூடாது என்பதையும் அவர்கள் உணர்த்தியுள்ளனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிந்த் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தார். தேனாம்பேட்டை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மகள் சௌந்தரியாவுடன் வருகை தந்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

நடிகர் அஜீத் முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்து நின்று அனைவருக்கும் சர்ப்பிரைஸ் கொடுத்தார். திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு 6.50 மணி அளவிலேயே வந்து நின்று அஜீத் குமார் முதல் ஆளாய் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். அதே போல இசை அமைப்பாளர் அனிருத் காலையிலேயே தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் வந்து சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தார்.

நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ், மனைவி கிரேஸ் மற்றும் மகன் கென் உடன் சிவகங்கை வாக்குச்சாவடியில் சென்று வாக்களித்தார். மதுரை கிழக்கு புது தாமரைப்பட்டியில் நடிகர் சசிகுமார் வாக்களித்தார். நடிகர் கௌதம் கார்த்திக் சென்னையில் வாக்கினை பதிவு செய்தார். இயக்குநர், நடிகர் மற்றும் மதுரை மத்திய தொகுதியின் என் டி ஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி, தன்னுடைய மனைவியும் பாஜக பிரமுகருமான நடிகை குஷ்பூடன் சென்று சென்னையில் வாக்களித்தார்.

நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம் , பிரபுதேவா, இயக்குநர் பா. ரஞ்சித், ஆர் ஜே பாலாஜி என பலரும் தங்களின் வாக்கினை பதிவு செய்துள்ளனர். பல நகரங்களிலும் பொதுமக்களும் வெயிலுக்கு முன்பாகவே வாக்களித்துவிட்டு சென்றுவிடலாம் என்பதற்காக காலையிலேயே வந்து வாக்களிப்பதை காண முடிகிறது.


Click it and Unblock the Notifications
