இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதில் முக்கிய பங்கை பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் மற்ற துறைகளை காட்டிலும் இத்துறையில் உயர் தர வேலைவாய்ப்புகளும், அதிக மதிப்புடைய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் காரணத்தால் தமிழ்நாட்டுக்கு இத்துறை முக்கிய இலக்காக மாறியுள்ளது.
இதேவேளையில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்குகள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இதன் மூலம் உருவாகும் வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றி தமிழ்நாட்டை முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி மையமாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?
கடந்த ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி மதிப்பு ரூ.1.54 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. அதேபோல், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி ரூ.38,000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு 2029-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் துறை உற்பத்தியை ரூ.3 லட்சம் கோடியாகவும், பாதுகாப்பு ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை அடைய உருவாகும் பெரிய அளவிலான முதலீட்டு வாய்ப்புகளில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்கைப் பெற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் உருவாக்கியுள்ள ஆதிக்கத்தை பாதுக்காப்பு துறை உற்பத்தியிலும் உருவாக்க வேண்டும் என்பது முக்கிய இலக்காக மாறியுள்ளது.
MSME, ஸ்டார்ட்அப்-க்கு ஜாக்பாட்
இத்தகைய இலக்கை அடைய வெறுமென பெரிய நிறுவனங்களின் முதலீடு இருந்தால் போதாது. MSME நிறுவனங்களின் உற்பத்தி உதவியும், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியும் மிகவும் அவசியமாக உள்ளது.
இதற்காக பாதுகாப்புத் துறையில் புதிய நிறுவனங்கள் எளிதாக நுழைய தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பு வசதிகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. தமிழ்நாடு பாதுகாப்புத் துறையின் இன்டஸ்ட்ரியல் காரிடார் கீழ் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காக்கள், இன்ஜினியரிங் மற்றும் இன்னோவேஷன் சென்டர்கள், பொதுப் சோதனை வசதிகள், மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு திறன் மையங்கள் போன்றவை உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பாதுகாப்புத் துறைக்குள் நுழைவதற்கான செலவுகள் மற்றும் தொழில்நுட்ப தடைகள் குறைக்க தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது.
இத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கவும், இத்துறை சார்ந்த வாய்ப்புகளை நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டவும் மதுரையில் தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் வழித்தடம் (TNDIC) சார்பிலான தொழில்துறை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இது தமிழ்நாடும் முழுவதும் நடைபெற்று வரும் தொடர் ஆலோசனை கூட்டங்களின் ஒரு பகுதியாகும். ஏற்கனவே கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி, சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு 2026 ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய மாநாட்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பாதுகாப்புத் துறை முதலீட்டு வாய்ப்புகளை தொழில் நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications