தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. காங்கிரஸ், இடதுசாரிகள் , விசிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியோடு தவெக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று கொண்டார்.
விஜய் முதலமைச்சரானது முதலே கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமென சில வாரங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு விவாசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 25.05.2026 தேதியில் ரூ.50,000/- வரை பயிர் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிடார். மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன என குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்ய முதலமைச்சர் விஜய் உத்திரவிட்டதற்கு இணங்க, மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை - உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தொகை ரூபாயில் குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கான தள்ளுபடி
ரூ. 75,000 வரை கடன் தொகை முழுவதும் (100%)
ரூ.75,000 க்கு மேல் கடன் தொகை எனில் ரூ. 35,000 தள்ளுபடி.
இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000, குறைந்தபட்சமாக ரூ.35,000 பணப்பயன் கிடைக்கும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி
* 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி
* 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி
என கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடி தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.விவசாயிகள் தாங்கள் கடன் வாங்கிய கூட்டுறவு வங்கிக்கு சென்று தொடர்பு கொண்டு கடன் தொகை தள்ளுபடி விவரங்களை கேட்டறியலாம்.


Click it and Unblock the Notifications


