தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி அமைப்பதற்கான பணிகளை வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலில் விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றியை பதிவு செய்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. திமுக ஆட்சியை இழந்திருக்கிறது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ஒருபுறம் இருக்க, இந்த சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் தங்கம் வாங்குவது பெரிய பிரச்சினையாக இருந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே மாநிலம் முழுவதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. அதாவது மாநில நிர்வாக கட்டுப்பாடு என்பது தேர்தல் ஆணையத்தின் வசம் சென்று விட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களால் கையில் ரொக்கமாக பணத்தை எடுத்துக் கொண்டு எங்கேயும் செல்ல முடியவில்லை. குறிப்பாக நகைக்கடைகளுக்கு சென்று தங்க நகை கூட வாங்க முடியவில்லை.
ஏனெனில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் தேர்தல் ஆணையம் சார்பாக சில விதிமுறைகள் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி பொதுமக்கள் தங்கள் கையில் 50,000 ரூபாய் மட்டுமே ரொக்கமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் பணம் வைத்திருந்தால் அதற்கு உரிய ஆவணத்தை காட்டுவது கட்டாயம். கார், பேருந்து, ரயில்கள், இருசக்கர வாகனம் என அனைத்து வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

வங்கியில் இருந்து பணம் எடுத்து இருந்தால் அதற்கான மெசேஜையும் ஸ்டேட்மெண்ட்டையும் காட்ட வேண்டும், 10 லட்சம் ரூபாய் மேல் பணம் கொண்டு சென்றால் வருமான வரி துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பல்வேறு கெடுபிடிகள் இருந்தன. இது நகை வாங்குவதற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. ஏனெனில் இன்றைய தேதிக்கு ஒரு சவரன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட கிட்டத்தட்ட 1.40 லட்சம் ரூபாய் பணம் தேவை.
ஆனால் தேர்தல் ஆணையமோ 50,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என கூறியது. இதனால் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பெரிய அளவில் நகை வாங்க வேண்டிய கட்டாயத்திலிருந்து அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகிவிட்டதால் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலகிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. எனவே 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்க பணமாக கையில் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நகை வாங்கி வருவதற்கு லட்சக்கணக்கில் கையில் பணத்தை கொண்டு செல்லலாம். தங்கம் வெள்ளி போன்ற பொருட்களையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் கொண்டு செல்ல முடியும் யாரும் உங்களை நிறுத்தி உங்களுடைய வாகனத்தையோ உங்களுடைய பைகளையோ சோதனை செய்ய மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications

