தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட இரண்டு பாட பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையே இல்லாமல் தத்தளிப்பது தெரிய வந்துள்ளது. தற்போது கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் அவை என்னென்ன படிப்புகள் என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் தெரிந்து கொள்வது நல்லது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை கணிதம் (B.Sc Mathematics) மற்றும் இளநிலை இயற்பியல் (B.Sc Physics) ஆகிய அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. சில கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலும், சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் விரிவான ஆய்வு நடத்தி தமிழ்நாடு மாநில உயர் கல்வி அமைப்பிற்கும் , உயர் கல்வி துறைக்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது. குறிப்பாக மாநிலத்தில் உள்ள 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கையே இல்லாமலோ அல்லது ஒற்றை இலக்க எண்ணிக்கையிலோ இருப்பது தெரியவந்துள்ளது.
ஊட்டி, இராமநாதபுரம், வால்பாறை, அரியலூர், ஒரத்தநாடு, கன்னியாகுமரி, திட்டக்குடி, குமாரபாளையம், மணல்மேடு, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த பட்டியலில் அடங்கும். பெரும்பாலான கல்லூரிகளில் பிஎஸ்சி கணித பிரிவிலும், சில கல்லூரிகளில் பி.எஸ்சி இயற்பியல் பிரிவிலும் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிஎஸ்சி இயற்பியல் படிப்பு 95 கல்லூரிகளில் கிடைகிறது மொத்தம் 3,577 இடங்கள் உள்ளன, அதில் 1,900 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. தமிழ் வழியில் பிஎஸ்சி இயற்பியல் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், ஆங்கில வழியை விட சற்றே சிறப்பாக உள்ளது என தெரிய வந்துள்ளது.
மாணவர் சேர்க்கை சீரடையாவிட்டால், சேர்க்கை மிக குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்துவது குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் பரிசீலித்து வருகிறது. ஆனால் இது தீர்வாகாது என்கின்றனர் கல்வியாளர்கள். வழக்கமான கணிதம், இயற்பியல் படிப்புகளுக்கு பதில் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் AI போன்ற நவீன தொழில்நுட்பங்களை இணைத்து புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த யோசனை கூறுகின்றனர்.
படித்த உடன் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையுல் பாடங்களை மாற்றி அமைத்தால் மாணவர் சேர்க்கை சீராகும் என கூறுகின்றனர். ஆட்சி மாற்றம் மற்றும் உயர் கல்வி துறை செயலாளர்கள் அடிக்கடி மாறுவது ஆகிய காரணங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தாமதத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

