சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5.7 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் தனியார் மற்றும் பொது துறைகளில் 5.74 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் கூடுதலாக 75,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளாட்சித் துறை மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட நிறுவனங்கள் வழியாக என பல்வேறு அரசு துறைகளில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 68,039 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக 5.08 லட்சம் இளைஞர்கள் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட பிரிவுகளில் 27.73 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்று அதனை நிறைவு செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சேவைகளில் மொத்தமாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 6224 இல் இருந்து 6724 என உயர்த்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல் எம்எஸ்எம்இ, தொழில்துறை, திறன் மேம்பாட்டு துறை வாயிலாக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு வகுப்புகளை நடத்தி அதன் மூலமும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் 53.48 லட்சம் பேர் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
இதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 53 , 48,663 பேர் காத்திருப்பதாகவும் இவர்களில் 24,63,081 பேர் ஆண்கள் 28,85,301 பேர் பெண்கள் ,281 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications