தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த இடைக்கால பட்ஜெட் பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என கூறி தன்னுடைய பட்ஜெட் உரையை தொடங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

பெண்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்துவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு மகளிர் உரிமை தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டம் என்றும் இதன் மூலம் 1.31 கோடி பெண்களும் மாதம் 1000 ரூபாய் பெறுகின்றனர் என கூறினார். குறிப்பாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத மகளிர் உரிமை தொகை மற்றும் கோடை கால சிறப்பு நிதியாக என மொத்தம் 5000 ரூபாய் பயனாளிகளின் கணக்கில் 3 மணி நேரத்தில் வரவு வைக்கப்பட்ட போது நாடே திரும்பி பார்த்தது என கூறினார். தொடர்ந்து மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்ற உறுதியையும் அளித்தார்.

நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார். விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர் என கூறிய அவர் 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது, 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன என மகளிர் நலன் காக்கும் அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.
குறிப்பாக 7 லட்சம் மாணவிகள் புதுமை பெண் திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என கூறினார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். முதலமைச்சர் காலை உணவு திட்டத்தால்அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர் என கூறினார். பள்ளி கல்வி துறைக்கு இந்த இடைக்கால பட்ஜெட்டில் 48,534 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறினார். உயர்கல்வி துறைக்கு 8,505 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.


Click it and Unblock the Notifications