காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் மற்றும் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஓரணியில் திரண்டுள்ளன. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஒற்றுமையாக மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து ஒட்டு மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளன.
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தந்து தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.

காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமல், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவை பெறாமல், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடுமையான எதிர்ப்பை தமிழ்நாடு தெரிவிக்கிறது என முதலமைச்சர் விஜய் பேரவையில் கூறினார்.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது என கூறிய விஜய் காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்றார். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது என குறிப்பிட்டார்.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது என குறிப்பிட்ட விஜய், கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது என்றார்.
முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை ஆதரித்து கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினார்கள். காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, பாமக, அதிமுக, திமுக என அனைத்து கட்சி உறுப்பினர்களும் மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை ஆதரித்தனர். இதனை அடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நதி நீர் பிரச்சினையில் கடிதம் மட்டும் எழுதாமல் அனைத்து கட்சி உறுப்பினர்களும் நேரடியாக டெல்லி சென்று மத்திய அரசிடம் ஒற்றுமையாக கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என யோசனை கூறினார்.


Click it and Unblock the Notifications

