2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது. பாரம்பரியமான திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இந்த முறை விஜய்-இன் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு வாக்களித்தனர்.
தனி பெரும் கட்சியாக தேர்தலில் வெற்றி பெற்றாலும் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தந்து தவெக ஆட்சி அமைத்தது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது. முதலமைச்சராக விஜய் பதவியேற்று 16 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உண்டாகி இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தார். இரண்டு தொகுதியிலுமே அவர் வெற்றி பெற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கூடிய விரைவில் அங்கே இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
இதற்கிடையே அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சில அதிமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்து விலகி தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமாரவேல் ,பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர். இதனால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவான இசக்கி சுப்பையா சட்டப்பேரவையில் அவை தலைவர் ஜேசிபி பிரபாகரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதனை அடுத்து அந்த தொகுதியும் காலியாகிறது. எனவே தமிழ்நாட்டில் விரைவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தல் முடிந்து வாக்குப்பதிவின்போது கையில் வைக்கப்பட்ட மை கூட அழியவில்லை அதற்குள் மீண்டும் ஒரு தேர்தலா என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை எம்எல்ஏ உயிரிழந்தால் மட்டுமே அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படும். தமிழ்நாட்டின் அரசியல் ஆளுமைகளான கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு அரசியலே மாறுபட்டு இருக்கிறது. அதற்குப் பின்னர் தான் உட்கட்சி பூசல், கருத்து வேறுபாடு, இரண்டு மூன்று அணிகளாக பிரிவது , கட்சி தாவுவது , எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்வது ஆகியவை அதிகமாக நடக்கின்றன.
முதன்முறை 2014 ஆம் ஆண்டில் தேமுதிக எம்எல்ஏவாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 2019 ஆம் ஆண்டு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் திடீரென தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. 2024 ஆம் ஆண்டில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதன்பிறகு எம்எல்ஏக்கள் கட்சி தாவி பதவியை ராஜினாமா செய்து அதனால் இடைத்தேர்தல் நடக்கப்போவது இது 4ஆவது முறையாக இருக்கிறது.
அரசியல்வாதிகளின் இது போன்ற செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு முறை தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வாக்குபதிவினை நடத்த வேண்டும். இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டு மக்களின் வரிப்பணம் தான் தேவையில்லாமல் செலவு செய்யப்படுகிறது. தேர்தல் வாக்களிக்க மீண்டும் சொந்த ஊருக்கு செல்வது என மக்களுக்கும் இது சிரமம் தான். அதுவும் தேர்தல் முடிந்து 1 மாத காலத்திலேயே அதுவும் தேர்தல் முடிவு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இது போன்ற செயல்கள் மக்களின் அதிருப்தியை அதிகரிக்க செய்துள்ளன.


Click it and Unblock the Notifications

