தமிழ்நாட்டில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. சேலம், ஈரோடு, சென்னை என பல மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது.
அனைத்து வீடுகளிலும் 24 மணி நேரமும் ஃபேன் இயக்கப்படுகிறது. அதே போல ஏசி பயன்படுத்தப்படும் வீடு, அலுவலகங்களில் எல்லாம் பெரும்பாலான நேரம் ஏசி இயக்கப்பட வேண்டிய கட்டாயத்தை இந்த வெயில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து வீடுகளுக்கு அடுத்த மாதம் கரண்ட் பில் எகிற போகிறது. இருந்தாலும் வெயிலை சமாளிக்க வேறு வழியில்லை.

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மின் துறை கோடை காலத்தில் டிமாண்ட் அதிகரித்து தென் இந்திய மாநிலங்களில் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களின் மின் தேவை குறித்த தகவல்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிட்டு இந்த மின் தேவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை 69,934 மெகாவாட்டில் இருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாம். குறிப்பாக, தமிழகத்தின் மின் தேவை 19,679 மெகாவாட்டில் இருந்து 19,822 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களிலேயே மின் தேவையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
தமிழ்நாட்டின் மின் தேவை தினமும் சராசரியாக 16,000 மெகாவாட்டாக உள்ளதாம். இது வெயில் காலத்தில் குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது இன்னும் அதிகரிக்கும். கடந்த மாதமே 21ஆம் தேதியில் தமிழ்நாட்டின் மின் தேவை புதிய உச்சம் தொட்டு 21,060 மெகாவாட்டாக இருந்துள்ளது. வரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவிலும் இதே நிலை தான் . எனவே மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின் துறை எச்சரித்துள்ளது. மின் பற்றாக்குறையை போக்க அரசு மின் வெட்டை கையில் எடுக்குமா என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வெயிலில் ஃபேன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் மின்வெட்டு பிரச்சினையும் வந்து அவ்வளவு தான் என கவலைப்படுகின்றனர் மக்கள்.
இதற்கிடையே தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் கோடையில் மின் தேவை எவ்வளவு இருக்கும், எவ்வளவு மின்சாரம் கிடைக்கும், பற்றாக்குறை எவ்வளவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, பற்றாக்குறையை சமாளிக்க, மின் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். எனவே தற்போதைக்கு மின்வெட்டு பிரச்சினை இருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications

