இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடும் மின்சார வாகன உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வாகன உற்பத்திக்கு தேவையான அரிய வகை காந்தங்களை நாம் பெரும்பாலும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம்.ஆனால் இனி அந்த தேவையை தமிழ்நாடே பூர்த்தி செய்ய போகிறது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமையவுள்ள அரிய வகை கனிம வழித்தடம் (Rare Earth Corridor) அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Indian Rare Earths Limited எனப்படும் இந்திய அரிய மண்வள அமைப்பு தான் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த வழித்தடம் அமைந்தால் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை ஈர்க்கும் மையமாக தூத்துக்குடி மாறும் என இதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எஸ்.பி. மோகந்தி உறுதி தெரிவித்துள்ளார்.

இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான IREL, தமிழக அரசு நிறுவனமான TAMIN-உடன் இணைந்து ஜூன் 2023-ல் ஒரு கூட்டு முயற்சியை தொடங்கியது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் மற்றும் குதிரைமொழி தேரி பகுதிகளில் அரிய வகை மண் கனிமங்களை பிரித்தெடுக்கும் ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளன.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ள எஸ்.பி. மோகந்தி இந்த ஆலை, நியோடைமியம்-பிரசியோடைமியம் (NdPr) ஆக்சைடை உற்பத்தி செய்யும். இது உள்நாட்டிலேயே நிரந்தர காந்தங்கள் (NdFeB permanent magnets) தயாரிக்கும் திட்டங்களுக்கு மூலப்பொருளாக வழங்கப்பட உள்ளது. இந்த காந்தங்கள் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும், இதனால் நாம் இதற்காக சீனாவை சார்ந்திருக்கும் சூழல் இருக்காது என கூறியுள்ளார்.

கடற்கரை மணலில் கிடைக்கும் இல்மனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile) மற்றும் மோனாசைட் (Monazite) போன்ற கனிமங்களை சுத்திகரிக்கும் முழுமையான ஆலையாக இது அமையும் என கூறியுள்ளார். இதில் கிடைக்கும் கனிமம் காற்றாலை மின்சார உற்பத்தி கருவிகள், மின்சார வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான காந்தங்களை உற்பத்தி செய்ய உதவும்.
இந்த ஆலை சுமார் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. ஆலை செயல்பாட்டுக்கு வந்ததும், நேரடியாகவும் மறைமுகமாகவும் 3,000 முதல் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தூத்துக்குடியின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் வேலைவாய்ப்புகளும் பெருகும். பல நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வரும் என அவர் பேட்டியில் கூறியுள்ளார்.
கனிம சுத்திகரிப்பு ஆலை வருவதால், அதனை சார்ந்துள்ள பல்வேறு துணை தொழில்கள் வரும், குறிப்பாக தமிழ்நாட்டில், வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் மோட்டார்கள் மற்றும் காந்தங்களை உள்ளூரிலேயே கொள்முதல் செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நிலம், மின்சாரம் மற்றும் சிறப்பு தொழில் சலுகைகளை வழங்க வேண்டும். மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதிகளை விரைவாக வழங்கினால் மட்டுமே, ஆந்திரா மற்றும் ஒடிசா போன்ற பிற மாநிலங்களை விட வேகமான வளர்ச்சியை காண முடியும் என்று மோகந்தி கூறியுள்ளார்.
இந்த திட்டத்தால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அவர் விளக்கம் தந்துள்ளார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) ஆய்வுகளை மேற்கோள் காட்டும் அவர் மணிலில் இருந்து மோனாசைட் எனப்படும் கதிரியக்க தன்மை கொண்ட தாதுக்கள் பிரிக்க்ப்படும், அதன் பின் மீதமுள்ள மணல் மீண்டும் நிரப்பப்படுவதால், அந்த பகுதி கதிர்வீச்சு அற்ற இடமாக மாற்றப்பட்டு, முன்பை விட பாதுகாப்பானதாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

