ரேஷன் கடைகளில் இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெங்காயமும் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் விஜய் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசினார். அப்போது, . ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்யக்கூடிய மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவிலிருந்து வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில்கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான முறையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது என அறிவித்தார்.
ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு நகர்ப்பகுதியில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள் வழியாக அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8,739 நியாயவிலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் ஒரு ரேஷன் அட்டைக்கு தலா 1 கிலோ வெங்காயம் கிடைக்கும் என்றும் ஒரு கிலோ வெங்காயம் விலை 35 ரூபாயாக இருக்கும் என்றும் கூறினார். தேவையின் அடிப்படையில், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
முன்னதாக நாசிக்கில் இருந்து சென்னைக்கு 840 டன்கள் வெங்காயம் ரயிலில் கொண்டு வரப்பட்டது. இது ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் வெங்காயம் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் அரசுகள் சார்பாக மக்களுக்கு தடையில்லாமல் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெங்காயம் பதுக்கலை தடுக்கவும், கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெங்காயம் இந்தியர்கள் அன்றாடம் உணவில் சேர்த்து பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருளாகும். வெங்காயம் விலை உயர்ந்தால் நம் மாதாந்திர பட்ஜெட்டிலும் உணவின் ருசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications

