தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் மூலம் அரசு சார்பாக பள்ளியிலேயே உணவு வழங்கப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காலை உணவு திட்டமும் சேர்க்கப்பட்டது.
ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் படிப்பையும் , உரிய ஊட்டச்சத்தை பெறுவதை உறுதி செய்யவும் காலை மற்றும் மதிய உணவு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் இந்த திட்டம் பல மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் உணவு பசியை இந்த திட்டங்கள் தான் தீர்த்து வைக்கின்றன.

இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தில், மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன் தெரிவித்துள்ளார். சென்னையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜமோகன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பான குறைகள், கோரிக்கைகள் கேட்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் அமைப்புகள் மற்றும் பணியாளர் சங்கங்கள் கலந்துகொண்டு, தங்களின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் அமைச்சரிடம் சமர்ப்பித்தன. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜமோகன், இந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில், மதிய உணவு திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும் என கூறினார். இந்த கோரிக்கையை அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டு பரிசீலித்து வருகிறது என்றார்.
இது முதலமைச்சர் விஜய்-இன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிகிறது. முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி உணவாக பரிமாறப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் சமர்ப்பிக்கும் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்படும். இதன் மூலம் அந்தந்தக் கோரிக்கைகளின் தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை குறித்து கல்வி துறை கவனம் செலுத்தி வருவதாக கூறினார். மாணவர்களின் சத்துணவு முறையில் உணவுகளை மாற்றுவதன் மூலம், பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிக்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை வழங்கவும் இத்தகைய முன்னெடுப்புகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் நிலையில் ,சிக்கன் பிரியாணி பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவு என்பதால் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

