தமிழ்நாட்டை தொழில் துறையில் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடன், கோவையில் TN Rising Conclave என்ற முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (நவ.25) நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் மூலம், தமிழ்நாடு அரசு பல முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்களை செய்ய தயாராக உள்ளது. நீண்ட காலமாக தொழில் நகரமாக இருக்கும் கோவையை, இனி உயர் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையமாக மாற்றுவதே இதன் மிக முக்கிய இலக்காகும்.
மாநாட்டின் முக்கிய நோக்கங்கள் : இந்த முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில், "கோவையை உலக முதலீட்டாளர்கள் தேடி வரும் ஒரு நகரமாகவும், எதிர்கால தொழில்களுக்கும் சேவைகளுக்கும் தயாரான மையமாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். இதன் மூலம், இங்குள்ள இளைஞர்களுக்கு அதிக திறமை தேவைப்படும் நல்ல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்த மாநாடு, மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆட்டோமொபைல் எலக்ட்ரானிக்ஸ், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி, ட்ரோன் மற்றும் சிறிய விமானங்கள், அத்துடன் டேட்டா சென்டர்கள் போன்ற டிஜிட்டல் உள்கட்டமைப்புகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் முழுமையாக கவனம் செலுத்துகிறது.
கோவை ஏற்கனவே வாகன உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் வலுவாக உள்ளது. தற்போது, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான துல்லியமான பொருட்களை தயாரிக்கும் மையமாகவும் வளர்ந்து வருகிறது. அத்துடன், வெளிநாட்டு நிறுவனங்களின் பெரிய செயல்பாட்டு மையங்களை (Global Capability Centres - GCCs) ஈர்க்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக் கட்டமைப்பையும் வேகமாக மேம்படுத்தி வருகிறது.
பிரம்மாண்ட முதலீடுகள் : இந்த மாநாட்டில் பல புதிய மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்சன் எலெக்ட்ரிக் : இந்த நிறுவனம், நிரந்தர மேக்னட் DC மோட்டார்களை தயாரிக்க சுமார் ரூ.1,300 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஹுண்டாய் வீயா : மின்சார 4 சக்கர வாகனங்களுக்கான முக்கிய உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஆலையை அமைக்க சுமார் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய உள்ளது.
டெல்த் ஹெல்த்கேர் : உயிர் அறிவியல் (Life Sciences) துறையில் இது ஒரு முக்கிய அறிவிப்பு ஆகும். இந்த மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனம், தருமபுரி மாவட்டத்தில் ஒரு புதிய உற்பத்தி வசதியை நிறுவ சுமார் ரூ.1,250 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இந்த மாநாட்டின் முதன்மை இலக்கு பொருள் விநியோக தொடர்களை வலுப்படுத்துவது என்பதால், ஒரு சில பெரிய ஒப்பந்தங்களுக்கு பதிலாக, பல்வேறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்தும் அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஒரு பொருளை தயாரிப்பதற்கான அனைத்து நிறுவனங்களும் அருகருகே அமைந்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications