தமிழ்நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது உள்கட்டமைப்பு துறை என்பது அத்தனை பேருக்கும் தெரியும், ஆனால் இத்துறையில் செயல்பாடுகளை வேகப்படுத்தவும், மேம்பட்ட நிர்வாகத்தை அளிக்கவும், உள்கட்டமைப்பின் தரத்தையும் உயர்த்தவும், மாநில அரசின் வருமானத்தை அதிகரிக்கவும் என ஒரு தனிப்பட்ட அமைப்பு இல்லை.
இந்த இடைவெளியை நிரப்ப ஆவின், சிப்காட், டிட்கோ, ஸ்டார்ட்அப்TN வரிசையில் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (Tamil Nadu Infrastructure and Construction Corporation) என்ற புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.

சட்டப்பேரவை கூட்டம் நடந்த போது, பொதுப்பணித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடக்கும் போது, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகத்தின் பணி என்ன..? என்ன செய்யப்போகிறது..?
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் இனி வரும் காலக்கட்டத்தில் 200 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பு கொண்ட அரசு கட்டுமான திட்டத்தை நேரடியாக கையில் எடுத்து செயல்படுத்த உள்ளது.
பொதுவாக பொதுப்பணித் துறை ஒரு திட்டத்தை ஆய்வு செய்து, அதன் முக்கியத்துவம், மக்களின் தேவை ஆகியவற்றை கணித்து டென்டர் மூலம் கட்டுமான திட்டத்தை செயல்படுத்தும். ஆனால் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் நேரடியாக கட்டுமான துறையில் இறங்க உள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் எல் அண்ட் டி, டாடா ப்ராஜெக்ட்ஸ் போன்ற முன்னணி நிறுவனத்திற்கு இணையாக வளர்ச்சி அடைய உள்ளது. TNICC என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த நிறுவனம் அரசு திட்டத்தை மட்டும் அல்லாமல் தனியார் திட்டத்தையும் கையில் எடுத்து செயல்படுத்தி வருமானம் ஈட்ட உள்ளது. உதாரணமாக டெக் பார்க் கட்டுமானம், பிஸ்ன்ஸ் ஹப் போன்றவற்றை செயல்படுத்தவும் உருவாக்கப்பட்டு உள்ளது.
TNICC நிறுவனம் பல்வேறு சேவைகளை உருவாக்க உள்ளது, குறிப்பாக ஆர்கிஸ்டக்ச்சரல் பிளானிங், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட், குவாலிட்டி கன்ட்ரோல் போன்ற பல சேவைகளை கொடுக்க உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு துறையில் அரசு நேரடியாக வருமானத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைவிட முக்கியமாக TNICC அமைப்பு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான காலி நிலங்கள், பயன்படுத்தப்படாத நிலங்களை கண்டறிந்து இவற்றை முறையாக பயன்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ளும். அப்படி கண்டறியப்படும் நிலத்தில் உலக தரம் வாய்ந்த கட்டிடங்கள், பெரிய வர்த்தக கட்டிடங்களையும் TNICC கட்டும். இதை வாடகைக்கோ அல்லது குத்தகைகோ விட்டு அரசு நேரடியாக வருமானத்தை ஈட்டும்.
அடுத்த முக்கிய மாற்றமாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சகம் இனி பெரு நகரங்களில் அரசு கட்டிடங்களை 2-3 தளங்கள் உடன் நிறுத்திக்கொள்ளாமல் 20-30 மாடிகளாக கட்ட திட்டமிட்டு வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் பெரு நகரங்களில் நிலத்தின் விலை அதிகமாக இருக்கிறது. இதேபோல் தேவையும் அதிகமாக இருக்கிறது. இதை இரண்டையும் மனதில் வைத்து இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. இதன் மூலம் அரசு கட்டிடங்களிலும் முழு FSI பயன்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications