பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் ஏற்றுமதி தொழில்கள் ஏற்றமடைந்து பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் பெருக போகிறது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக கடல்சார் ஏற்றுமதி மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2,500 ஏக்கர் பரப்பளவில் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவின் முதல் கடல்சார் ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் இந்த 5 மாவட்டங்களின் இப்பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், கடல் உணவு ஏற்றுமதியை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் சார் ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படுவதன் மூலம் திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுமார் 1.8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் . தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் பல இருந்தாலும் கடல் சார்ந்த உணவு பொருட்கள் ஏற்றுமதி என்பது குறைவாகவே உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதித் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், மத்திய அரசு இந்தியாவின் முதல் கடல்சார் ஏற்றுமதி சிறப்பு பொருளாதார மண்டலத்தை தமிழ்நாட்டில் அமைக்க முன் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள இந்த பிரம்மாண்டமான திட்டத்திற்காக சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது சுமார் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலம் இந்த திட்டத்தை செயல்படுத்தும். இதன் மூலம் மீன், இறா போன்ற கடல் உணவு ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும் அதுமட்டுமில்லாமல் மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகள் தமிழ்நாட்டில் இருந்து உலக சந்தைக்கு செல்லும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடல்சார் ஏற்றுமதி மண்டலங்கள் வெறும் ஏற்றுமதி மையங்களாக மட்டும் இல்லாமல், அனைத்து வசதிகளையும் கொண்ட ஒருங்கிணைந்த தொகுப்புகளாக உருவாக்கப்பட உள்ளன. இவற்றில் மீன் பதப்படுத்தும் நிலையங்கள், குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் , பேக்கேஜிங் மற்றும் ஏற்றுமதி தளவாடங்கள் , கடல் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்படும்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் உப்பு பாத்திகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இவை அமைக்கப்பட உள்ளன. தற்போது இந்த நிலங்கள் மத்திய அரசின் உப்பு ஆணையர் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை கையகப்படுத்தி, திட்டத்தை செயல்படுத்த MEPZ நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த திட்டம் தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களிலும் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை பெருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இது குறித்து சென்னையைச் சேர்ந்த கடல் உணவு ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் முகமது ஆதிஃப் அளித்துள்ள பேட்டியில் இந்த மண்டலங்கள் கடல் உணவுத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான Ready-to-cook போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு இந்த மையங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் 1.30 லட்சம் மெட்ரிக் டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு 840 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2025-2026இல் இது 1.52 லட்சம் மெட்ரிக் டன்களாகவும் 878 மில்லியன் டாலராகவும் உயர்ந்தது. இந்த வளர்ச்சியை மேலும் வேகப்படுத்த இந்த மண்டலங்கள் அவசியம். இந்த திட்டம் முழுமையாக செயல்படும்போது, தமிழ்நாடு கடல் உணவு ஏற்றுமதியில் உலக அளவில் ஒரு முக்கிய மையமாக உருவெடுக்கும்.


Click it and Unblock the Notifications

