எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இதற்கான உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டு மக்கள் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எப்படி பெட்ரோல் பங்க் முக்கியமோ, அதேபோல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் முக்கியம்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் இயக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு அடுத்த 5 வருடத்தில் அதாவது 2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20000 பப்ளிக் இவி சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 520க்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் தினமும் பதிவாகி வருகின்றன, இதேவேளையில் ஏற்கனவே பதிவாகியுள்ள எலக்ட்ரிக் வாகனங்களும், சார்ஜிங் கட்டமைப்புகளையும் பார்க்கும் போது, ஒரு சார்ஜிங் ஸ்டேஷனுக்கு தலா 254 எலக்ட்ரிக் வாகனங்கள் என்ற அளவில் உள்ளது. இதுவே அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனுக்கு தலா 104 எலக்ட்ரிக் வாகனங்கள் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் EV வாகனங்கள் பதிவுகளின் வேகத்திற்கு இணையாக புதிய சார்ஜிங் கட்டமைப்புகள் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இது வெறும் சார்ஜிங் கட்டமைப்பு என்றளவில் பார்க்காமல் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் EV வாகனங்களின் உற்பத்தி மற்றும் அதன் இயக்கத்திற்கான ஏணிப்படியாக இருக்கும்.
இதனால் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகளை வேகப்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு ஒற்றை ஜன்னல் முறையில் ஒப்புதல் அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதேபோல் சார்ஜிங் ஸ்டேஷன் இருப்பிடத்தை சரியாக மக்களுக்கு காட்டு கூகுள் மேப்ஸ் உடன் பணிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாட்டில் மேம்பட்ட சார்ஜிங் கட்டமைப்பு இருக்கும் போது EV துறையில் புதிய முதலீடுகளையும் ஈர்க்க முடியும், குறிப்பாக வின்பாஸ்ட் போன்ற புதிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களையும் ஈர்க்கும் வாய்ப்பாக மாற்றும், எந்தொரு சந்தையும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் தான் வளரும்.
உதாரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்த போது உலகில் இருக்கும் அத்தனை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் இந்தியாவுக்கு வந்தனர். இதேபோல் தான் EV துறையும், எலக்ட்ரிக் வாகனங்களின் இயக்கத்தில் இருக்கும் தடைகளை உடைத்துவிட்டால் மக்கள் மத்தியில் EV பயன்பாடு அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications

