சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பது என முடிவு செய்து தமிழ்நாடு அரசு அதற்கான பணிகளை மிக தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. ஒருபுறம் பரந்தூர் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ்நாடு அரசு விமான நிலைய திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, ஒப்பந்த ஆவணம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு மார்ச் மாதத்தில் பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி தொடர்பான டெண்டர் ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறது என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இந்த டெண்டர் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும். இதனை அடுத்து ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே மத்திய அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான ஒப்புதலை தந்து விட்டது. இந்த விமான நிலைய திட்டத்திற்கான ஒப்பந்தம் கோருவதற்கு முன்னர் ஒப்பந்த ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும். இந்த ஆவணங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை ஒப்புதல் அளித்த பிறகு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு குறிப்பிட்ட நிறுவனத்திடம் கட்டுமான பணி என்பது வழங்கப்படும்.
ஆவண தயாரிப்பு பணிகள் முழுமை பெற்று மார்ச் மாதத்தில் இதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு அனுப்ப அரசு முடிவு செய்திருக்கிறதாம். மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்க இரண்டு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலும் முடிந்திருக்கும் தேர்தல் விதிமுறைகளும் திரும்ப பெறப்பட்டிருக்கும் என்பதால் அப்போது ஒப்பந்த புள்ளி கோரப்படும்.
எனவே தேர்தல் முடிந்த பின்னர் தான் டெண்டர் வழங்கப்படும் இதனை அடுத்து அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு கட்டுமான பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். மொத்தம் 27,400 கோடி ரூபாய் முதலீட்டில் பரந்தூரில் சர்வதேச விமான நிலையத்தை கட்ட அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த கட்டுமான பணிக்கு மொத்தம் 5,746.18 ஏக்கர் நிலம் தேவை இதில் 1972.17 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது 3,774.01 ஏக்கர் நிலத்தை அரசு தனியாரிடமிருந்து கையகப்படுத்த வேண்டும். தற்போது வரை 1650 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டு வருகிறது எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications