சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகத்தின் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம், 2020- 2021 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்துவருகிறார்.
தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசின் வருவாய் 2,19,375 கோடி ரூபாய் எனவும், இதே செலவு 2,41,601 கோடி ரூபாய் எனவும், ஆக மொத்தம் பற்றாக்குறை 22,226 கோடி ரூபாய் எனவும் சட்டபேரவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் 2020 -21ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் 4,56,660 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தமிழக பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சரி இந்த பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
எவ்வளவு ஒதுக்கீடு
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உணவு மானியத்திற்கு 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதோடு திருந்திய நெல் சாகுபடிக்காக 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு டெல்டா மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு அதிக ஒதுக்கீடு
இதே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வித்துறைக்கு அதிக ஒதுக்கீடு எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், கல்வித்துறைக்கு 30,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதே உயர்கல்வித்துறைக்கு 5,052 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழடிக்கு ஒதுக்கீடு எவ்வளவு
இதே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார் நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனை விடுவிப்பதற்காக 3,100 ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்துக்கு 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக காவல்துறைக்கு 8,876 கோடி ரூபாய் நிதியும், தமிழ் வளர்ச்சிக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்படும்.
பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா
இதே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே நகராட்சி நிர்வாகத்திற்கு 18,540 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் பாதுகாப்பு கருதி அனைத்து தமிழக பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் தமிழகத்தின் நிதியமைச்சர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.