புதிய தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
பல தரப்பினரும் பாராட்டும் வகையில் கொரோனாவினை எதிர்கொண்டு வருகின்றது தமிழக அரசு. இதற்கிடையில் பல துறைகளிலும் பல அதிரடியான மாற்றங்கள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
குறிப்பாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய அறிவிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கலாம் எதிர்ப்பார்ப்பு உள்ளது. சாமனிய மக்கள் வருவாயினை இழந்து, கொரோனாவினால் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கான அறிவிப்பும் வருமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இது பிடிஆர் பட்ஜெட் இல்லை
இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவரவுள்ள தமிழ்நாடு பட்ஜெட் முதல்வர் MK Stalin தொலை நோக்கு பார்வையுடன் உருவாகி வருகின்றது. ஆக இது பிடிஆர் பட்ஜெட் இல்லை. இது முதலமைச்சர் பட்ஜெட் தான். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக IAS அதிகாரிகள் எழுதி தரும் பட்ஜெட்டுக்கு மாற்றாக ஒரு அரசியல் வாதி எழுதியதாக இருக்கும் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி திட்டங்கள்
உண்மையில் பிடிஆரின் இந்த பதிவானது பட்ஜெட்டின் மேல் இன்னும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதோடு கொரோனாவுக்கு மத்தியில் கடன் நெருக்கடியில் உள்ள தமிழ்நாடு, இதில் இருந்து மீண்டு வர பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
தமிழக அரசின் பொருளாதார நிபுணர்கள் குழு
தமிழ் நாடு அரசு பொருளாதாரத்தினை மேம்படுத்த அரசுக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் ஆலோசனை வழங்கும் விதமாக பொருளாதாரம் சார்ந்த ஒரு சிறப்பு ஆலோசனை குழுவை நியமித்தது. இந்த சிறப்பு குழுவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் ஃபாஃப்லோ, ஜான் த்ரே, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், பொருளாதார செயலர் எஸ் நாரயணன் உள்ளிட்ட ஐந்து பொருளாதார ஜாம்பவான்களின், பங்கும் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விற்பனை இல்லை
பல்வேறு காரணிகளால் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்து வருகின்றது. எனினும் அதனை சமாளிக்க அரசின் எந்த சொத்துகளையும் விற்பனை செய்வது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது போன்ற அணுகுமுறை இருக்காது. அதற்கு பதிலாக வளம் பொருந்தியவற்றை அரசு சரியான முறையில் நிர்வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
என்னென்ன இடம் பெறலாம்?
அரசு நிலங்களை முறையாக நிர்வகித்து தொழிற்துறையை மேம்படுத்துவது என்பது மிக அவசியமான ஒன்று. அதே போல ஜிஎஸ்டியிலும் மறுசீரமைக்க வேண்டும். தமிழக பட்ஜெட்டில் பல அவசியமான மாற்றங்கள் இருக்கலாம் என கூறியுள்ளார். மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இங்கு பலரின் எதிர்பார்ப்பும்.