கடந்த சட்டமன்றத் தேர்தலில்போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
குறிப்பாக விவசாயிகளே இந்த நகைக்கடன் மூலம் பெரும்பாலும் பயனடைந்து வருகின்றனர்.
இதனிடையே தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்ட விவசாய கடன், விவசாய நகைக் கடன், தள்ளுபடி செய்வதாக அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தள்ளுபடி வழங்காமல் அலைகழிப்பு
அதன் அடிப்படையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் விவசாயிகளுக்கு கடன் இல்லா சான்று வழங்கியது. ஆனால், 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் விவசாயிகள் அடமானமாக வைத்த நகைகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் திரும்ப அளிக்காமல் அலைக்கழித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
சூப்பர் உத்தரவு
இதற்கிடையில் தான் சமீபத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் 2018 -19, 2019 -20, 2020 -2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அறிவிப்பு வெளியாகலாம்
இதையடுத்து விரைவில் தொடங்கவுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனை குழு தலைமையில் உருவாகும் பட்ஜெட்
தமிழ் நாடு அரசு பொருளாதாரத்தினை மேம்படுத்த அரசுக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் ஆலோசனை வழங்கும் விதமாக பொருளாதாரம் சார்ந்த ஒரு சிறப்பு ஆலோசனை குழுவை சமீபத்தில் நியமித்தது. அந்த சிறப்பு குழுவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ, ஜான் த்ரே, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், பொருளாதார செயலர் எஸ் நாரயணன் உள்ளிட்ட ஐந்து பொருளாதார ஜாம்பவான்களின், பங்கும் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.