தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை முழுமையாகத் தயாரித்து நாளை தாக்கல் தயாராக உள்ள நிலையில், மக்களின் சில முக்கியமான கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வரி உயர்வு, கட்டண உயர்வுகள் இருக்குமா என்பது தான் சாமானிய மக்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.
வருமானம்
தமிழ்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் போதுமான வருமானம் GSDP அளவீட்டின் படி கிடைப்பது இல்லை, இதுதான் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வர்த்தக வரி, சுரங்கம், மதுபானம், கலால் வரி ஆகியவற்றில் இருந்து கிடைக்க வேண்டிய வரி வருமானம் முழுமையாகக் கிடைப்பது இல்லை.
வருவாய் இழப்பு
GSDP அளவீட்டின் படி சுமார் 2-3 சதவீதம் வருமானம் கிட்டதட்ட 10000 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பல வகையில் தமிழ்நாடு இழந்து வருகிறது. குறிப்பாக டாஸ்மாக்-ல் இருந்து கிடைக்கும் வருவாய் 50 சதவீதமும், கமர்சியல் டாக்ஸ் பிரிவில் 40-50 சதவீதம் வரையில் வரி வருமானத்தை இழந்து வருகிறோம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் திட்டம்
மேலும் வருவாய் இழக்கும் ஓட்டைகளைப் பலவற்றைக் கண்டறிந்து இதை அடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கான அறிவிப்புப் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் இதனால் அரசின் வருவாய் கட்டாயம் வரும் காலத்தில் உயர்வும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
10 மாத பணிகள்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வர முக்கியத் தடையாக இருக்கும் 'வருவாய் பிரச்சனையை'த் தீர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளதாகவும், அதை விரைவில் சாத்தியப்படுத்தக் கடந்த 10 மாத கால ஆட்சியில் நிதித் துறையின் நிர்வாக மாடலை மாற்றி இருப்பதாகக் கூறியுள்ளார் பழனிவேல் தியாகராஜன்.
வரி உயர்வு இருக்காது..!!
பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வருவாய் இழக்கும் வழிகளை அடைக்கும் முயற்சியில் இருக்கும் காரணத்தால் மக்களுக்கும் வர்த்தகச் சந்தைக்கும் கூடுதல் சுமை அளிக்கும் வகையில் வரி உயர்வோ, அல்லது கட்டண உயர்வோ இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications