ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து, மாநில அரசுகளுக்கான வருவாய் கணிசமாக குறைந்துவிட்டது.
மத்திய அரசு கொடுக்கும் பணத்தை நம்பித் தான் மாநில அரசுகள் இயங்க வேண்டி இருக்கிறது.
ஆனால் மதுபானம், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள் இன்னும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படவில்லை. எனவே இதில் இருந்து இப்போதும் மாநில அரசுகளுக்கு கணிசமாக வருமானம் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் தமிழகம் போன்ற சில மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
மதுபானம்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் தமிழகம், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மதுபானங்களில் இருந்து மட்டும் சுமாராக 20,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வந்து இருக்கிறது என்றால், இந்த மாநிலங்களில் குடிமகன்களின் பங்களிப்பு புரியும்.
மற்ற மாநிலங்கள்
இந்தியாவில் சுமாராக 21 மாநிலங்களுக்கு, தங்கள் சொந்த வருவாயில் (மத்திய அரசு கொடுக்கும் வருவாய் பகிர்வுப் பணம் இல்லாமல்) 15 %-க்கு மேலான வருவாயை மதுபானம் வழியாகவே ஈட்டி இருக்கிறார்கள் என்றால் மதுபானம் விற்பனை, மாநிலங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் புரியும்.
குடிமகன் பங்களிப்பு
தமிழகம், உத்திரப் பிரதேசம் எல்லாம் கூடப் பரவாயில்லை, ஒரு கணிசமான வருவாய் மதுபானத்தில் இருந்து வருகிறது என புரிந்து கொள்ளலாம். ஆனால் மிசோரம், புதுச்சேரி மேகாலயா போன்ற மாநிலங்களில் எல்லாம், சுமாராக 50 % சொந்த வருவாய் மதுபானங்களில் இருந்து தான் வந்து கொண்டு இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆக மதுபானம் மாநிலங்களுக்கு இன்றி அமையாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தமிழகம் தனி இடம்
இந்தியாவின் மொத்த மதுபான நுகர்வில் 13 சதவிகித மதுபானத்தை நம் தமிழர்கள் மட்டுமே வாங்கிக் குடிக்கிறார்கள். அதாவது ஒட்டு மொத்தமாக இந்தியா 100 லிட்டர் மதுபானம் குடிக்கிறது என்றால், அதில் 13 லிட்டர் மதுபானத்தை தமிழகர்கள் மட்டுமே குடிக்கிறார்கள். இதை பெருமையாகப் பார்ப்பதா, அவமானமாகப் பார்ப்பதா தெரியவில்லை.
அரசு கஜானா
தமிழக அரசு, சுமாராக 5,300 டாஸ்மாக் கடைகளை தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த கடைகளில் நடக்கும் சரக்கு விற்பனை மூலம், தமிழக அரசு, ஆண்டுக்கு சுமாராக 30,000 கோடி ரூபாய் கல்லா கட்டுகிறார்கள். சமீபத்தில் கூட, தமிழகம் 180 மிலி மதுபானத்துக்கு 10 - 20 ரூபாய் விலை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
விலை ஏற்றம் பயன் இல்லை
லைவ் மிண்ட் பத்திரிகையின் ஒரு செய்தியில் "மதுபானத்தின் மீது என்ன தான் விலை ஏற்றம் செய்தாலும், எந்த ஒரு குடிகாரனின் மன நிலையையும், வாங்கும் அளவையும் பெரிதாக பாதிக்கவில்லை" எனத் தெளிவாகச் சொல்கிறது. ஆக அரசு, மதுபானம் மீது, 200 % கூடுதல் வரி விதித்தாலும், சரக்கு விற்பனை வழக்கம் போல நடந்து கொண்டு தான் இருக்கும் என்கிறார்கள்.
உடல் நலம்
ஒரு பக்கம் அரசுக்கு வருவாயைப் பார்க்க வேண்டும். மறு பக்கம் அந்த வருவாய்க்காக, மக்களின் உடல் நலத்தையே விலை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இதை நாமே புரிந்து கொண்டு மது பழக்கத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்றால், நாளை தமிழகம் ஒரு குடிகார சமூகமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. மதுவை கைவிடுவோம். ஆரோக்கியமான தமிழ் சமூகத்துக்கு வழி வகுப்போம்.