இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து நுகர்வு பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உணவு பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து வரும் காரணத்தால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஹர்தீப் சிங் பூரி
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசு அதிகப்படியான வரி விதிப்பு குறித்து நாடு முழுவதும் விமர்சனம் எழுந்துள்ள வேளையில், பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த வரிப் பணம் எல்லாம் கோவிட் வேக்சின்க்கும், இலவச உணவுத் திட்டங்களுக்கும், சமையல் எரிவாயுவுக்கும் செல்கிறது எனக் கூறியுள்ளார்.
மோடி சொன்னது சரியா
இதேவேளையில் நேற்று பிரதமர் மோடி 100 கோடி வேக்சின் மக்களுக்குச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து வீடியோ வாயிலாக மக்களிடம் பேசினார். அதற்குச் சாய்மா என்பவர் நான் என்னுடைய இரண்டு டோஸ்களுக்கும் பணம் செலுத்தினேன், குடும்பத்தினரின் இரண்டு டோஸ்களுக்கும் பணம் செலுத்தினேன், எங்கள் வீட்டில் பணியாற்றுவோருக்கு அளிக்கப்பட்ட இரண்டு டோஸ்களுக்கும் பணம் செலுத்தினேன். இந்தப் பணத்தை எப்படியாவது திரும்பப் பெற முடியுமா..? என்று கேட்டுள்ளார்
மக்கள் கேள்வி
பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சொல்வது போல் பெட்ரோல், டீசல் மீதான வரிப் பணம் சமையல் எரிவாயுவுக்குச் சென்றால் சிலிண்டர் விலை உயர கூடாது. ஆனால் உயர்கிறது. மோடி சொல்வது போல் அரசு 100 கோடி வேக்சின் கொடுத்துள்ளது என்றால் இலவசமாக அளித்திருக்க வேண்டும், ஆனால் பெரும்பாலான மக்கள் பணம் கொடுத்துத் தான் வேக்சின் செலுத்தியுள்ளனர்.
4வது நாளாக உயர்வு
இந்த வேளையில் இன்று பெட்ரோல், டீசல் விலை 4வது நாளாக உயர்ந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை கடந்து மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, விலைவாசியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
2 வருட சோக கதை
இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் கடந்த இரண்டு வருடத்தில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் நிறுவனங்கள் கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 6 ரூபாயும் உயர்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இதேபோல் கடந்த 2 வருடத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34.35 ரூபாயும், டீசல் விலை 30 ரூபாயும் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக டீசல் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 25 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்றைய பெட்ரோல் விலை (Oct 22)
சென்னை - 104.22 ரூபாய், டெல்லி - 107.24 ரூபாய், கொல்கத்தா - 107.78 ரூபாய், மும்பை - 113.12 ரூபாய், பெங்களூர் - 110.98 ரூபாய், ஹைதராபாத் - 111.55 ரூபாய், கோழிக்கோடு - 107.72 ரூபாய், போபால் - 115.90 ரூபாய், இந்தூர்- 115.94 ரூபாய்.
இன்றைய டீசல் விலை (Oct 22)
சென்னை - 100.25 ரூபாய், டெல்லி - 95.97 ரூபாய், கொல்கத்தா - 99.08 ரூபாய், மும்பை - 104.00 ரூபாய், பெங்களூர் - 101.86 ரூபாய், ஹைதராபாத் - 104.70 ரூபாய், கோழிக்கோடு - 101.51 ரூபாய்.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இன்று ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 1.53 சதவீதம் அதிகரித்து 83.76 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.09 சதவீதம் அதிகரித்து 85.53 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.