தமிழ்நாட்டில் 50 சதவீத மக்கள் தொகை நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயத்தை அடிப்படை வருமானம் ஈட்டும் தொழிலாகக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசின் விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் என்பது அனைவராலும் வரவேற்கும் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாடு அரசு முதல் முறையாகத் தாக்கல் செய்துள்ள விவசாயப் பட்ஜெட் விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அறிவிக்கப்பட்டு உள்ள திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது எனப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலைக்குத் தமிழ்நாட்டின் நிதிநிலையும் ஒரு காரணம்.
விவசாயத்தில் இளைஞர்கள்
இளைஞர்களை விவசாயம் செய்ய ஊக்குவித்துள்ளதும், அதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பால் கிராமங்களில் இருக்கும் மக்கள் நகரங்களுக்கு இடம்பெயரும் எண்ணிக்கை குறையும் என்றும், இதனால் விவசாயம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எந்த ஊருக்கு என்ன..?
சரி, தமிழ்நாட்டின் முதல் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் எந்த ஊருக்கு என்னவெல்லாம் கிடைத்துள்ளது என்பதை இப்போது விளக்கமாகப் பார்க்கலாம்.
கோவை மாவட்டம்
கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைத் துறையை 'நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' எனப் பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தோட்டக்கலை பயிர்கள்
திருவள்ளூர், கடலூர், நாமக்கல், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்த ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீட்டு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் அதிகளவிலான பலன் அடைய முடியும்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் பலா உற்பத்தியை மேம்படுத்தவும், அதன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் சிறப்பு மையம் துவக்கவும், இதோடு கடலூர் மாவட்டம் வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
விற்பனைக் கூடங்கள்
ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் விளை பொருளைச் சேமிக்கவும், பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
குளிர்பதனக் கிடங்குகள்
8 மாவட்டத்தில் விற்பனைக் கூடங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதோடு ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களைக் கூடுதலான காலம் சேமித்து விற்பனை செய்ய முடியும்.
கொல்லிமலை
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் பழங்குடி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மிளகு-ஐ பதப்படுத்திச் சேமித்து வைக்கப் பரிவர்த்தனைக் கூடம், உலர் களத்துடன் கூடிய பதப்படுத்தும் மையம் அமைக்க ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வேளாண் சந்தை வளாகம்
நீலகிரி, எடப்பள்ளி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பில் 'ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்' அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் இப்பகுதி மக்கள் தங்களது விளை பொருட்களைச் சிறப்பான முறையில் வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வர முடியும்.
சேலம், ஈரோடு
கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.3.5 கோடி மதிப்பில் 28 உலர் கலங்கள் அமைக்கப்பட உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சேமிப்புக் கிடங்கு, பரிவர்த்தனைக்கூடம், கூட்டரங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மின்னணு எடை மேடை ஆகிய கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஈரோடு மாவட்டம் பவானி சாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க 2 கோடி ரூபாய்
முருங்கை ஏற்றுமதி மண்டலம்
முருங்கை அதிகளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் 'முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக' அறிவிப்பு.
மதுரை
மதுரையில் முருங்கைக்கெனச் சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திகள் (Driers), இலைகளைப் பொடியாக்கும் இயந்திரங்கள் (Pulveriser), தானியங்கி சிப்பம் கட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை
சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம் துவங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதியதாகத் துவங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி-நாகப்பட்டினம்
காவேரி டெல்டா வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக, திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடிப்படை வலிமைப்படுத்தல்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியை வலுப்படுத்துவதற்கு ரூ. 573.24 கோடி அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உழவர் சந்தை எண்ணிக்கை
தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளைப் புனரமைக்க ரூ.12.50 கோடி நிதியும், புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.