சமூக வலைத்தளங்களில் திடீரென சில விஷயங்கள் டிரெண்டாகி லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெறும். அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது. இங்கே நெல், கரும்பு, வாழை , நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அள்ளிவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜன் என்பவர் தான் விளைவித்த மரவள்ளிக் கிழங்குகளை சொகுசு காரில் எடுத்து வந்து விற்பனை செய்து கவனம் பெற்றிருக்கிறார்.

மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா காரில் பின்பக்கத்தில் அவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த மரவள்ளிகிழங்குகளை வைத்து விற்பனை செய்யும் காட்டி இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களில் வைரலாகிவருகிறது. மரவள்ளி கிழங்கு எப்போதும் விளையும் நிலத்திலேயே வந்து வியாபாரிகள் வாங்கி செல்வார்கள், ஆனால் தற்போது மழை பெய்யும் நிலையில் யாரும் வரவில்லை என கூறும் விவசாயி ராஜன், மரவள்ளிக் கிழங்கு வீணாகும் சூழல் உள்ளதால் அதனை தானே காரில் எடுத்து வந்து விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த சாகுபடிக்கு அதிக செலவு செய்த நிலையில், தனியாக வாடகைக்கு வாகனம் வைத்து விற்பனை செய்தால் அதற்கு கூடுதல் செலவாகும் என்பதால் தன்னுடைய சொந்த காரில் எடுத்து வந்து விற்பனை செய்வதாக கூறியுள்ளார். எர்டிகா காரில் வந்து 3 கிலோ100 ரூபாய்க்கு என அவர் விற்பனை செய்வதும் மக்கள் அதனை ஆர்வமாக வாங்கி செல்வதும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் இவரை டிஜிட்டல் விவசாயி , சூப்பர் என பாராட்டி இருக்கின்றனர். ஒரு நபர் வெளிநாடுகளில் விவசாயிகள் இப்படித்தான் தங்களுடைய பொருட்களை கார்களில் வந்து விற்பனை செய்வார்கள் அதே போன்ற ஒரு நிலை இந்தியாவிலும் பார்க்க முடிகிறது என தெரிவித்திருக்கிறார். மாருதி எர்டிகா கார் தமிழ்நாட்டில் அதன் வகையை பொறுத்து 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இப்படி தான் கேரளாவில் ஒரு நபர் ஆடி காரில் கீரை கட்டுகளை கொண்டு வந்து விற்பனை செய்தது டிரெண்டானது. சுஜித் என்ற விவசாயி ஆடி காரில் வந்து சந்தையில் தரை விரிப்பை போட்டு தன்னுடைய காரில் இருந்து கீரை கட்டுகளை கொண்டு வந்து செய்தார்.


Click it and Unblock the Notifications