தமிழ்நாட்டில் வரும் 2025 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பொங்கல் தொகுப்பை வழங்க தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் தமிழக அரசால் குறைந்த விலை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். எனவே, இந்தாண்டிற்கான பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு அரிசி, கரும்பு,சர்க்கரை மற்றும் பொங்கல் செய்ய தேவையான பொருட்களை வழங்கும். கூடுதலாக, பொங்கலுக்காக ரொக்கமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம், இலவச வேட்டி, சேலைகள் ஆகியவை வழங்கப்படும். எனவே, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இதுகுறித்து தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.

இதற்கிடையில், தமிழக அரசின் கூட்டுறவு துறை ஆனது, வரும் ஆண்டின் பொங்கலுக்கான சிறப்பு தொகுப்பை வழங்க உத்தரவை வெளியிட்டுள்ளது. அந்த பொங்கல் தொகுப்பானது, கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் ரூ 199, ரூ 499, ரூ 999 மதிப்பில் சிறப்பு பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் பொருட்களை கொள்முதல் செய்து சிறப்பு பொங்கல் தொகுப்பினை மண்டலத்தின் அனைத்து அலகுகள் மூலம் விற்பனை செய்திட கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இதேபோல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை நடைபெற்றது. இந்த சிறப்பு தொகுப்பானது, எலைட் மற்றும் பிரீமியம் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். அந்த பிரீமியம் தொகுப்பு, ரூ.199, ரூ.299 என்ற விலையில் விற்கப்பட்டன.
அவற்றில், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு ஆகியவை 250 கிராம், வறுத்த கடலை 200 கிராம், மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, சோம்பு ஆகியவை 50 கிராம் மற்றும் மிளகாய்-250 கிராம், தனியா-200 கிராம், புளி, ரவை-100 கிராம், ஏலக்காய்-5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications