பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் 3,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையையும் , ஒரு கிலோ அரிசி , சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகையும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நேற்று அதிகாரப்பூர்வமாக பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கப்போகிறது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச பொங்கல் பரிசு தொகையாக இந்த ஆண்டு வழங்கப்படக் கூடிய இந்த 3,000 ரூபாய் இருக்கிறது. முதல் நாளில் பொங்கல் பரிசு தொகை வாங்கிய ஏராளமான மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பொங்கல் பரிசு தொகை அதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், பொங்கல் பரிசு தொகையும் கிடைக்கிறது.
பொங்கல் பரிசு தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் மட்டுமே பெற முடியும். வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியூர்களில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டு சொந்த ஊரில் இருக்கிறது என்றால் அவர்கள் சொந்த ஊரில் உள்ள தங்களுடைய ரேஷன் கடையில் மட்டுமே பொங்கல் பரிசு தொகை வாங்க முடியும்.

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் கூட தாங்கள் வசிக்கக்கூடிய ஊரிலேயே கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் பொங்கல் பரிசு தொகை அப்படி வாங்க முடியாது. தங்களுக்கு சொந்தமான ரேஷன் கடை எதுவோ அந்த ஊருக்கு சென்று அங்கே குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கைரேகை வைத்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகையும் பொங்கல் பரிசு தொகுப்பும் கிடைக்கும்.
எனவே வெளியூர்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுக்கு ஊர்களின் டோக்கன் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை விசாரித்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் ரேஷன் கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு எந்த தேதியில் வந்தால் பொருட்கள் மற்றும் பணத்தை வாங்க முடியும் என கேட்டுக்கொண்டு அந்த தேதியில் சொந்த ஊருக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய உறவினர்களோ நண்பர்களோ உங்களுக்காக பொங்கல் பரிசு தொகையை வாங்க முடியாது . ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒரு உறுப்பினர் கைவிரல் ரேகை வைத்தால் தான் இந்த பணமும் பொருளும் கிடைக்கும் என்பதால் வெளியூர்களில் வசிக்கக்கூடிய மக்கள் அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications