தமிழ்நாடு மக்கள் உற்சாகமாக கொண்டாட கூடிய பண்டிகை தான் பொங்கல் . தை முதல் நாளில் அனைவரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று புது பானையில் பொங்கலிட்டு குடும்பத்தோடு உண்டு மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகை என்பது தை முதல் நாளோடு நின்று விடுவது கிடையாது. இரண்டாவது நாள் மாட்டுப்பொங்கல் அடுத்ததாக காணும் பொங்கல் என குடும்பத்தினரோடு கொண்டாடி மகிழக்கூடிய ஒரு பண்டிகையாக பொங்கல் பண்டிகை தொடர்ந்து இருந்து வருகிறது .
அண்மைக்காலமாக பொங்கல் பண்டிகை என்றாலே ரேஷன் கடைகளில் வழங்கப்படக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து விடுகிறது . ஏனெனில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு, திராட்சை , முந்திரி உள்ளிட்டவற்றையும் , ரொக்க பணத்தையும் வழங்குவதை வழக்கமாக்கி இருக்கிறது.

அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு எவ்வளவு ரொக்கப் பணம் வழங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. பொங்கல் பரிசுக்கான டோக்கன் எப்போது முதல் விநியோகம் செய்யப்படும், பொங்கல் பரிசு பணம் எவ்வளவு வழங்கப்படும், அந்த பணம் எப்போது தங்கள் கைகளுக்கு வந்து சேரும் என லட்சக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார் . தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு தற்போது தயாராக உள்ளது ,அதன் விநியோகம் விரைவில் தொடங்கும் வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என தெரிவித்தார் .
ஜனவரி 10ஆம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்க வேண்டும் என அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்படி பார்த்தால் ரொக்க பணம் வழங்கப்படுவதாக இருந்தால் அது பொங்கல் தொகுப்போடு சேர்த்து தான் வழங்கப்படும். எனவே ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகமும் , ஜனவரி இரண்டாம் வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை விநியோகமும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் நிச்சயம் இந்த முறை பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என்றும் 3000 ரூபாய் வரை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டிலும் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 2 அல்லது 5ஆம் தேதியிலிருந்து டோக்கன் வினியோகம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான டோக்கன் அச்சடிக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications