ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் உள்ளிட்டவற்றை அமைத்து வருகிறது.
முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து நகரங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என திட்டமிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீட்டாளர் மாநாடுகளை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. TN Raising என்ற பெயரில் நடத்தப்படும் மாநாடுகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.

முதன்முதலாக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் டிஎன் ரைசிங் எனப்படும் தமிழ்நாடு வளர்கிறது என்ற தலைப்பிலான முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த இந்த முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் 32,554 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன . 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் துறை சார்பில் 205 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1196 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெற்றதை அடுத்து தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் ஓசூரில் டிஎன் ரைசிங் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. ஓசூரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் 24,307 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடிய வகையில் 92 நிறுவனங்களோடு தமிழ்நாடு அரசு புரிந்துணர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது . இதன் மூலம் சுமார் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது .ஏற்கனவே தொழில் வளர்ச்சி நகரமாக இருக்கக்கூடிய ஓசூருக்கு இந்த முதலீட்டாளர் மாநாடு மேலும் ஊக்கம் தரும் வகையில் அமைந்தது பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய முதலீடுகளை கொண்டு வந்தன .

அடுத்ததாக நவம்பர் மாதம் 26ஆம் தேதி கோயம்புத்தூரில் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. கோவை முதலீட்டாளர் மாநாட்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கோவையை டெக் நிறுவனங்களின் மையமாகவும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான மையமாகவும் மாற்றும் வகையில் இந்த மாநாடு நடந்தது.
கோயம்புத்தூரை தொடர்ந்து அடுத்ததாக மதுரை மாவட்டத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கைடன்ஸ் தமிழ்நாடு என்ற எக்ஸ் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. மதுரையில் அடுத்த கட்டமாக டிஎன் ரைசிங் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என அதன் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரையிலும் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய போகின்றன ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகப் போகின்றன.


Click it and Unblock the Notifications