பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் தமிழக சட்டசபை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் அவை கூடுவது தான் வழக்கம். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்திருந்த நிலையில் இன்றைய தினம் என்ன செய்வார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த சூழலில் சட்டசபையில் பேச தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் பாடப்படவில்லை என குறிப்பிட்டு தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். இந்நிலையில் ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் தமிழ்நாடு அரசு இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன சாதனைகளை மேற்கொண்டு இருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

குறிப்பாக தொழில்துறையில் தமிழ்நாடு அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 12.16 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகளை ஈர்த்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநிலம் எங்கும் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களோடு இதுவரை 1,176 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை சுமார் 36 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 2026 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணுவியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன, தேசிய அளவிலான மின்னணுவியல் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41.2 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 49,000 மகளிர் தொழில் முனைவோருக்கு இதுவரை 283 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும் ஒவ்வொரு வீடும் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு கட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே நோக்கம் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் வரும் 22, 23ஆம் தேதிகளில் கேள்வி பதிலுடன் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என்றும் 24 ஆம் தேதி முதலமைச்சர் பதிலளிப்பார் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications