முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு முதல் முறையாகத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு திட்டங்களும், அறிவிப்புகளும் வெளியானது.
பெண் ஊழியர்களுக்கான 12 மாத பேறுகால விடுப்பு, குடும்பப் பாதுகாப்பு நிதி திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டது, ஆனால் இதில் அனைவராலும் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்படுவது அகவிலைப்படி அறிவிப்பு தான்.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி
2022 ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜனவரி மாதம் முதலே அளிக்கப்படும் என சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 மாதத்திற்கு முன்பே
இதனால் பல லட்சம் அரசு ஊழியர்கள் ஜனவரி மாதம் முதல் கூடுதல் சம்பளம் பெறுவது மட்டும் அல்லாமல் 3 மாதத்திற்கு முன்கூட்டியே அகவிலைப்படி பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த அறிவிப்பு மூலம் அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாமல் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அளவும் உயர உள்ளது.
பட்ஜெட் அறிக்கையில் அறிவிப்பு
பட்ஜெட் தாக்கலின் போது தமிழக அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆயினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) 1.4.2022 முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழக அரசின் நிதிநிலை
தற்போது தமிழக அரசின் நிதிநிலை கணிசமாக மேம்பட்டு இருக்கும் காரணத்தால் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை முன்கூட்டியே அளிக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
சத்துணவு ஊழியர்களின்
மேலும் இன்று வெளியான அறிவிப்பில் அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும் எனவும், சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் அமைப்புப் போராட்டம்
ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் அமைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து அகவிலைப்படி-யில் 11 சதவீத உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை உடன் விருதுநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவரி 1 முதல் உயர்த்தப்பட வேண்டும்
கொரோனா தொற்றுக் காரணமாகத் தமிழக அரசு ஏப்ரல், 2020 முதல் அகவிலைப்படியை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 சதவீதம் அதிகரித்து ஜூலை 1 2021முதல் அமலாக்கம் செய்தது. ஆனால் தமிழக அரசு ஏப்ரல் 1, 2022ல் இருந்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அளிப்பதாகப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு இழப்பு
இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை ஜனவரி 1 முதல் அளிக்க வேண்டும் என இப்போராட்டத்தின் போது விருதுநகர் TNROA அமைப்பின் மாநில செயலாளர் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஏற்கனவே அதிகளவிலான இழப்பைச் சந்தித்து விட்டோம், இனியும் இழப்பை ஏற்க முடியாது எனப் போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு இணையாக
ஆகஸ்ட் மாதம் சுமார் 20 இடங்களில் அரசு அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், பலர் மத்திய அரசுக்கு இணையாகத் தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை 28 சதவீதம் வரையில் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 1 முதல்
இதற்கிடையில் தமிழக முதல்வர் இன்று அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை ஜனவரி 1, 2022 தேதி முதல் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் அவர்களின் போராட்டத்திற்கான பதிலும் கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு மூலம் சுமார் 20 லட்சம் ஊழியர்கள் ஜனவரி 1 முதல் கூடுதலான சம்பளத்தைப் பெற உள்ளனர்.