தமிழ்நாட்டை 2025ஆம் ஆண்டுக்குள் சர்வதேச பின்டெக் நிறுவனங்களுக்கான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாடு பின்டெக் கொள்கை 2021-ஐ வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பின்டெக் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பையும் உருவாக்கித் தருவது மட்டும் அல்லாமல் ஊக்கத் தொகையும் அளிக்க உள்ளதாகத் தனது கொள்கையில் அறிவித்துள்ளது.
இத்திட்டம் பல வெளிநாட்டு நிறுவனங்களை மட்டும் அல்லாமல் இந்தியாவில் புதிதாகத் துவங்க உள்ள நிறுவனங்களையும் பெரிய அளவில் ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பின்டெக் சிட்டி
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்தும் வரும் துறையாகப் பின்டெக் துறையைத் தமிழக அரசு பார்க்கிறது, இத்துறை நிறுவனங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இத்துறை நிறுவனங்களுக்காகப் பின்டெக் சிட்டி-ஐ சென்னையில் சுமார் 165 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளது.
பின்டெக் ஸ்டார்ட்அப் சலுகைகள்
தமிழ்நாட்டில் துவங்கப்படும் பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் உதவ வேண்டும் என்பதற்காக 75 சதவீதம் ஆப்ரேஷனல் செலவுகளைத் திருப்பி அளிக்கவும், பயிற்சி மற்றும் மார்கெட்டிங்-ஐ தவிர்த்து ஆகும் அனைத்துச் செலவுகளுக்கு 100 சதவீத SGST-ஐ 3 வருட காலத்திற்குத் திருப்பி அளிக்க (reimbursement) உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
50 கோடி ரூபாய் முதலீடு
இந்த ஊக்கத் தொகையைப் பெற ஒரு நிறுவனம் 50 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டையும், 300 நேரடி வேலைவாய்ப்புகளை 3 வருடத்திற்குள் உருவாக்கி இருக்க வேண்டும். இதேபோலே பெரு நிறுவனங்கள் பிற மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாறும் பட்சத்தில் relocation incentive பிரிவின் கீழ் 10 கோடி ரூபாய் வரையில் அளிக்க உள்ளதாகத் தமிழ்நாடு பின்டெக் கொள்கை 2021-யில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஊக்கத் தொகை
இதேபோல் தமிழ்நாட்டில் பின்டெக் நிறுவனங்களைப் பெரு நகரங்களில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்திற்கும் வாய்ப்பு அளிக்கும் விதமாக Tier 1 நகரங்களில் துவங்கும் நிறுவனங்களை விடவும் Tier 3 நகரங்களில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு 2 மடங்கு ஊக்கத் தொகையும், Tier 2 நகரத்தில் துவங்கும் நிறுவனங்களுக்கு 1.5 மடங்கு ஊக்கத் தொகையும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
முதலீட்டு உதவிகள்
பின்டெக் துறையில் தமிழ்நாட்டில் துவங்கும் ஸ்டார்ட்அப் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு ஏஞ்சல் பண்ட், தனியார் பங்கு முதலீடுகள், வென்சர் கேப்பிடல் பண்ட் மற்றும் இக்கியூபேட்டார்ஸ் உதவிகளையும் அளிக்க உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசின் நிதியுதவி திட்டங்கள்
இதுமட்டும் அல்லாமல் பின்டெக் துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சீடு கிரேன்ட், தமிழ்நாடு Emerging Sector Seed Fund, யாதும் ஊரே, State Innovation Fund எனப் பல மாநில அரசின் நிதியுதவி திட்டங்களும் உண்டு.
பின்டெக் நிர்வாகக் குழு
இதோடு தமிழ்நாட்டில் பின்டெக் நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் வரையில் வேகமாகப் பணிகளை மேற்கொள்ளவும், தொடர்ந்து இத்துறையைக் கண்காணிப்பில் வைக்கவும் தமிழக அரசு புதிதாக FinTech Governing Council அமைத்துள்ளது. இக்குழு தமிழகத் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கீழ் துவங்கப்பட்டு, தலைமைச் செயலாளர் இறையன்பு துணைத் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications