ஹெச்சிஎல், ஹனிவெல் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் தமிழகத்தில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பிசினஸ் லைன் தளத்தில் வெளியான செய்தியில், ஹெச்சிஎல், ஹனிவெல் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் தமிழக்கத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் மதுரை - கன்னியாகுமரி இடையே விரைவான தொழில் துறை வளர்ச்சியினை விரிவுபடுத்த, இந்திய தொழில் துறை கூட்டமைப்புடன் (சிஐஐ) இணைந்து பணியாற்ற மாநில அரசு ஆர்வமாக உள்ளது என்று வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடந்த வாரத்தில் கூறியிருந்தார்.
தமிழகத்தில் நிறுவ ஆர்வம்
சிஐஐ ஏற்பாடு செய்த இரண்டு நாள் சிஐஐ கனெக்ட் மதுரை 2020 (CII Connect Madurai 2020) என்ற தலைப்பில் பேசிய அவர், தென் தமிழகத்தின் வளர்ச்சியை அதிகரிக்க, கடந்த ஐந்து ஆண்டுகள் முதல் ஒன்பது ஆண்டுகள் வரையில் எடுத்துள்ள நடவடிக்கைகளால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவ ஆர்வம் தெரிவித்துள்ளன. இது தவிர பல சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நிறுவ ஆர்வம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
லிஸ்டில் ஹெச்சிஎல் மற்றும் ஹனிவெல்
ஹெச்சிஎல் மற்றும் ஹனிவெல் சிறந்த மெகா விரிவாக்க திட்டங்களில் உள்ள சிறந்த நிறுவனங்களில் அடங்கும். இது தவிர திருநெல்வேலி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் பல புதிய நிறுவனங்களும் வர ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா காலத்திலும் வளர்ச்சி
மேலும் அரசு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய உறுதி பூண்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்த போதிலும் ஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் மாநிலத்தில், கடந்த காலாண்டில் நல்ல செயல்திறனை பதிவு செய்துள்ளன. நல்ல முடிவுகளை கொண்டுள்ளன. தமிழகம் தெற்காசியாவின் ஐசிடி மையமாக மாறும் என்றும் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி அதிகரிப்பு
மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதி 2019 -20ல் 1.23 லட்சம் கோடியிலிருந்து 1.39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை தவிர டயர் 2 நகரங்களிலும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பலரும் தெற்கு மாவட்டங்களில் வேலைகளை பெற விரும்பினர். இதன் மூலம் 94,000 ஐடி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும் உதயகுமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார். உண்மையில் இது செயல்பாட்டிற்கு வந்தால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்திற்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்.