பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை-யில் புதிய அரசு அமைந்தாலும் மக்களும், நாடும் இன்னும் இயல்பு நிலைக்கு மாறவில்லை.
ஒருபக்கம் மக்கள் நாட்டை விட்டுப் பிழைப்புக்காக வெளிநாடு சென்று வரும் நிலையில் மறுபக்கம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்-க்காவும், ஐஎம்எப்-யிடம் இருந்து பண உதவிக்காகவும் கையேந்தும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இலங்கை மக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாக முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இலங்கைக்கு 3வது முறையாக அரிசி மற்றும் மருந்துகள் போன்ற முக்கியமான மற்றும் அத்தியாவசிய பொருட்களை இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு அனுப்பிய அத்தியாவசிய பொருட்களை இந்திய ஹைய் கமிஷ்னர் கோபால் பாக்லே, இலங்கை நாட்டின் வெளியுறவு விவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் முன்னிலையில் இலங்கை மக்களிடம் ஒப்படைத்தார்.
இலங்கை
இலங்கை மக்களுக்காக இந்திய அரசும், இந்திய மக்களும் ஒன்றிணைந்துள்ளனர் என இந்திய ஹைய் கமிஷ்னர் கோபால் பாக்லே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் தமிழக அரசு நன்கொடையாக வழங்கிய 3.4 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிலான மனிதாபிமானப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அரிசி, பால் பவுடர், மருந்துகள்
தமிழக அரசு இன்று இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர், 100 மெட்ரிக் டன் மருந்துகள் என மக்களின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அளித்துள்ளது.
மூன்றாவது தொகுப்பு
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டின் அரசு சார்பாக மூன்றாவதும் கடைசி உதவி பொருட்களைத் தமிழகத்திடம் இருந்து பெற்றுள்ளோம். இந்த நேரத்தில் உதவிய தமிழக மக்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கான இளம் தலைவர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
123 கோடி ரூபாய் உதவி
இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவைச் சமாளிக்கத் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சுமார் 123 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளாக அளித்து உதவி செய்வதாக அறிவித்தார். இந்த உதவியின் 3வது மற்றும் கடைசி உதவி தொகுப்பு இன்று அளிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications