இந்தியாவிலேயே அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்று. ஏற்கனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அலுவலகத்தை அமைத்தும், வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது 4 நாட்கள் ஐக்கிய அமீரகப் பயணத்தில் சுமார் 6100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைத் திரட்ட அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதில் எந்த நிறுவனம், எந்தத் துறையில், எவ்வளவு முதலீடு செய்துள்ளது தெரியுமா..?
முதல்வர் ஸ்டாலின்
வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், முதலீடுகளையும் ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக, தமிழர்கள் அதிகம் இருக்கும் ஐக்கிய அமீரகம் சென்று, இன்று அதிகாலையில் சென்னை திரும்பினார்.
ஐக்கிய அமீரகம்
இந்த 4 நாட்கள் பயணத்தில் ஐக்கிய அமீரக நாடுகளில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள், முன்னணி நிறுவன தலைவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக உள்ள சூழல் குறித்தும், ஊழியர்கள் திறன் குறித்தும், சமுகக் கட்டமைப்பு, வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றைக் குறைத்து முதல்வர் ஸ்டாலினும், தமிழக அரசு அதிகாரிகள் விவரித்தனர்.
6100 கோடி ரூபாய் முதலீடு
முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் ஐக்கிய அமீரக நாடுகள் பயணத்தில் சுமார் 6 நிறுவனங்களிடம் இருந்து 6 துறையில் சுமார் 6100 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்து, தத்தம் நிறுவனங்கள் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளது.
நோபிள் ஸ்டீல்ஸ்
துபாயைச் சேர்ந்த நோபிள் ஸ்டீல்ஸ் நிறுவனம் (Noble Steel Company),இரும்பு தளவாடங்கள் துறையில் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஸ்டீல் உற்பத்தி தளத்தைச் சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீடு முதலீட்டில் அமைக்க உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் சுமார் 1,200 பேருக்குத் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்குவது மட்டும் அல்லாமல் ஏற்றுமதி வர்த்தகமும் கிடைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
ஒயிட் ஹவுஸ் நிறுவனம்
தமிழ்நாடு சிறந்து விளங்கும் ஜவுளித்துறையில் துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் (White House) 3 வருடத்தில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் திண்டிவனத்திலும், 5 வருடத்தில் 350 கோடி ரூபாய் முதலீட்டில் வாலாஜாபாத்திலும் இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் (Integrated Sewing Plants) நிறுவ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த 5 வருடத்தில் ஒயிட் ஹவுஸ் நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் முதலீடில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புகளைத் தமிழ்நாட்டில் உருவாக்க உள்ளது.
டிரான்ஸ்வேல்டு குழுமம்
தமிழ்நாட்டில் உணவுப் பூங்கா அமைப்பதற்காகத் துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமம் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர்
மருத்துவச் சேவையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நிறுவ சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம் மூலம் சுமார் 3500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனத் தெரிகிறது.
ஷெராப் குரூப்
ஐக்கிய அரபு நாடுகளில் கப்பல் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஷெராப் குரூப் தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்துத் துறையை மேம்படுத்த இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைக்க 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் குறைந்தது 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
லூலூ குரூப்
தமிழ்நாட்டில் ஷாப்பிங் மால் மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் சுமார் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது தமிழக அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் படி முதல் ஷாப்பிங் மால் 2024ல் சென்னையில் தொடங்கும் என்றும், அதே நேரம் முதல் ஹைப்பர் மார்கெட் வளாகம் 2022ஆம் ஆண்டு இறுதியில் கோவையில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.