இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. ஆனால் இந்த லிஸ்டில் தமிழகம் ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்துக்கு வந்துள்ளது.
மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம்- 2019 அடிப்படையில், எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இந்த பட்டியலானது கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்கள் அணுகல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச்சாளர அனுமதி என பல அம்சங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா முதலிடம்
இது குறித்து தனது கருத்தினை தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. கடந்த 2018ம் ஆண்டும் ஆந்திரா தான் முதல் இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தினை உத்தரபிரதேசமும், மூன்றாவது இடத்தில் தெலுங்கானாவும் உள்ளது.
தமிழகம் எந்த இடம்
4வது இடம் மத்திய பிரதேச மாநிலத்துக்கும், 5வது இடம் ஜார்கண்டுக்கும், 6வது இடம் சத்தீஷ்காருக்கும், 7-வது இடம் இமாசலபிரதேசத்துக்கும், 8வது இடம் ராஜஸ்தானுக்கும், 9வது இடம் மேற்கு வங்காளத்துக்கும், 10வது இடம் குஜராத்துக்கும் கிடைத்துள்ளது. எனினும் நாம் மிக எதிர்பார்க்கும் தமிழகம் இந்த பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது.
தமிழகம் ஒரு இடம் முன்னேறியுள்ளது
என்ன இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் கடந்த 2018ம் ஆண்டில் 15வது இடத்தில் இருந்த தமிழ் நாடு, 2019ல் 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் டெல்லிக்கு 12வது இடத்திலும், மராட்டியத்துக்கு 13வது இடமும், கர்நாடகத்துக்கு 17வது இடமும், புதுச்சேரிக்கு 27வது இடமும், கேரளாவுக்கு 28வது இடமும் கிடைத்துள்ளது.
கடைசி இடத்தில் இவர்கள்
பட்டியலில் கடைசி இடமான 29வது இடத்தில் அருணாசலபிரதேசம், சண்டிகார், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இதற்கிடையில் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தினை பற்றி கூறிய நிதியமைச்சர், இதன் மூலம் நாம் ஏற்றுமதியினை அதிகரிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகம் நன்றாகத் தானே செயல்பட்டது
அதெல்லாம் சரி, தமிழகம் தான் சமீபத்தில் ஏப்ரல் - ஜூன் 2020 காலாண்டில், அதிக முதலீடுகளை ஈர்த்த பட்டியலில் தமிழகமும் ஒன்று. நாடு முழுவதும் கொரோனா காலத்தில் கூட, 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், 30,664 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருந்தது. பின்னரும் ஏன் 14வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதுவும் ஒரு காரணம்
மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சூழல் கவர்ச்சிகரமானதாக இருக்கும்போது, அந்த மாநிலம் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக இருக்கும். அதோடு இது மாநில அரசின் ஒத்துழைப்பு, மாநில அரசு கொண்டு வரும் சட்டங்கள், மக்களின் ஒத்துழைப்பு, மாநிலத்தில் நிலவும் அரசியல், தொழில் நுட்பம், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், வழக்குகளின் எண்ணிக்கை, ஆன்லைன் சிஸ்டம் என பலவற்றையும் கருத்தில் கொண்டு தான் இது பட்டியலிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications