இன்றைய கால கட்டத்தில் சென்னை, மும்பை, டெல்லி, அஹமதாபாத் போன்ற பெரு நகரங்களில் மிகப் பெரிய சவாலாக வளர்ந்து கொண்டு இருக்கும் பிரச்சனை சாலை நெரிசல் தான்.
இந்த சாலை நெரிசலுக்கு எதை எல்லாம் முக்கிய காரணமாகச் சொல்லலாம் என்று பார்த்தால், வாகன அதிகரிப்பும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
வாகனங்கள் எந்த மாநிலத்தில் அதிகமாக இருக்கிறது என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
நம்பர் 1
1000 பேரில் எத்தனை பேர் சொந்தமாக வாகனங்களை வைத்திருக்கிறார்கள் என்றால், அதில் குஜராத் மாநிலம் 450 வாகனங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. இதை மத்திய போக்குவரத்து அமைச்சகம் தன் மோட்டார் வாகன பதிவுகள் அறிக்கையில் சொல்லி இருக்கிறதாம். இது கடந்த டிசம்பர் 31, 2019 வரையான கணக்காம்.
தமிழகம்
அடுத்த இடத்தில், 1000 பேருக்கு 445 வாகனங்களுடன் நம் தமிழகம் இரண்டாமிடத்தில் இருக்கிறதாம். (அதான் பொங்கல் லீவுக்கு பெருங்களத்தூர தாண்டவே 5 மணி நேரம் ஆகுதா..?) தமிழகத்தைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் 1000 பேருக்கு 372 வாகனத்துடன் கர்நாடகாவும், 335 வாகனங்களுடன் மகாராஷ்டிரா 4-வது இடத்திலும், 190 வாகனத்துடன் உத்திரப் பிரதேசம் 5-வது இடத்திலும் இருக்கிறதாம்.
ஏன்அதிகரிப்பு
ஏன் தனியாக வாகனம் வைத்திருப்பது அதிகரித்து இருக்கிறது என்கிற கேள்விக்கு "போதுமான பொதுத் துறை போக்குவரத்து வசதிகள் இல்லாதது, பயண நேரத்தில் மற்ற வேலைகளைச் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து இருக்கிறது. எனவே பொது போக்குவரத்தை நம்பாமல், தனி வாகனங்களை வாங்குகிறார்கள்" என்கிறார்கள் நிபுணர்கள்.
மொத்த வாகனம்
இந்தியாவில் மொத்தம் 31.72 கோடி வாகனங்கள் பதிவாகி இருக்கிறதாம். இதில் குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களை மட்டும் சேர்த்தால், ஒட்டு மொத்த இந்தியாவில் பதிவாகி இருக்கும் வாகனங்களில் 49 சதவிகிதம் வந்துவிடுமாம்.
எண்ணிக்கை
மொத்த 31.72 கோடி பதிவான வாகனங்களில், 11.9 சதவிகித வாகனங்கள் மகாராஷ்டிராவில் பதிவாகி இருக்கிறதாம். உத்திரப் பிரதேசத்தில் 11.38 சதவிகித வாகனங்கள், தமிழகத்தில் 10.11 சதவிகித வாகனங்கள், குஜராத்தில் 8.5 சதவிகித வாகனங்கள் கர்நாடகத்தில் 7.1 சதவிகித வாகனங்கள் பதிவாகி இருக்கிறதாம்.