வியட்நாமில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வின் நீங்கா நினைவுகளை ஏற்படுத்த வேண்டும் என ஆசையுடன் சுற்றுலா சென்றவர்கள் இன்று உயிருடன் இல்லை. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியட்நாமின் ஹான் மே ரட்டிலிருந்து 36 பேர் மற்றும் 4 ஊழியர்களுடன் விசைப்படகு ஒன்று ஆன் தோய் துறைமுகம் நோக்கி கடலில் சென்று கொண்டிருந்தது. இதில் 32 பேர் இந்திய சுற்றுலா பயணிகள். அப்போது திடீரென படகு கடலில் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்த தகவல் கிடைத்ததும் அருகில் இருந்த பிற சுற்றுலா படகுகள், கடலோர காவல் படை, கடற்படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், படகின் 4 ஊழியா்கள் உள்பட 21 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ஆனால் 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். இவர்களில் 13 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். இறந்தவர்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவத்தில் லாவா செல்போன் நிறுவனத்தில் அதிக போன்களை விற்பனை செய்ததற்காக நிறுவனத்தால் சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட ஊழியர்கள் உட்பட தமிழர்கள் 10 உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்து ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், படகு விபத்து தொடா்பான தகவல் மற்றும் உதவிகளை வழங்க வசதியாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. +84362817930, +84915523714, +84334520414, +84913089165 ஆகிய எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறைகளைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முருகபிரபு
செந்தில்குமார்
அழகுராஜன்
பாலாஜி
ஷேக் அப்துல்லா
பாபு
ஸ்ரீதர்
வினய்குமார்
ரவிசங்கர்
சந்தோஷ்குமார்

விபத்தில் இறந்த செந்தில்குமாருக்கு நேற்று பிறந்தநாள் என கூறும் உறவினர்கள் பிறந்த நாளே அவருக்கு இறந்தநாள் ஆகிவிட்டது என கண்ணீர் வடிக்கின்றனர். இதற்கிடையே படகு விபத்தில் உயிா் தப்பிய பழனியை சோ்ந்த நிா்மல் குமாா் விபத்து குறித்து அளித்துள்ள பேட்டியில், படகு கரையில் இருந்து புறப்பட்ட 300 - 400 மீட்டரில் தொலைவிலேயே கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். கடலில் சென்று கொண்டிருந்தபோது, மிக பெரிய அலை படகை தாக்கியது. இதனால், படகு வேகமாக சாய்ந்தது, அப்போது சுமார் 20 போ் கடலில் தூக்கி வீசப்பட்டனா். மற்றவா்கள் படகுக்கு உள்ளேயே இருந்தோம். மீட்புப் படையினா் எங்களை மீட்டனா் என கூறியுள்ளார்.
படகில் ஏறிய உடன் நாங்கள் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தோம், அப்போது திடீரென படகு கவிழ்ந்தது, பலர் கடலில் வீசப்பட்டனர் என கூறும் அவர் என்ன நடக்கிறது என நாங்கள் உணர்வதற்குள் அனைத்துமே நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு படையினர் வந்து மீட்டனர் ஆனால் கரையில் மருத்துவ உதவி குழுக்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.
வியட்நாம் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர இந்திய தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வியட்நாம் படகு விபத்தில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களை பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழக அரசு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையம் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
