தமிழ்நாடு அரசின் நிகரக் கடன் அளவு 2022-23 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 30.3 சதவீதம் வரையில் சரிந்து 24,403 கோடி ரூபாயாக உள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 35000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்பிஐ வெளியிட்டுள்ள 24,403 கோடி ரூபாயில் திரும்பச் செலுத்த வேண்டிய பேமெண்ட்கள் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட அளவாகும்.
மாநில வளர்ச்சி கடன் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சந்தையில் இருந்து பத்திரங்களை வெளியிட்டு கடன் பெறும். இந்தக் கடன் அளவு தான் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 30.3 சதவீதம் குறைந்து 24,403 கோடி ரூபாயாக உள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த கடன்
தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு 2022-23 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 33000 கோடி ரூபாயாக உள்ளது, இதே மொத்த கடன் அளவு கடந்த ஆண்டு 39000 கோடி ரூபாய். 2022-23 முதல் பாதியில் அதாவது முதல் 6 மாதத்தில் தமிழ்நாட்டின் கடன் அளவு குறைந்தது மூலம் மாநிலத்தின் மேம்பட்ட நிதி செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.
CAG அமைப்பு
இதேவேளையில் இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அமைப்பின் தரவுகள் படி தமிழ்நாட்டின் மொத்த வருவாய் அளவு 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 1.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 85,209.74 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. கடன் அளவை குறைக்க வருவாய் அளவுகளில் ஏற்பட்ட வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டின் வருவாய்
தமிழ்நாட்டின் வருவாய் பிரிவில் பல வழிகளில் இருந்து அரசு வருமானத்தைப் பெறுகிறது. அப்படித் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் பிரிவில் மாநிலத்தின் சொந்த வரி வருமானம், மத்திய வரி விதிப்புகளில் இருக்கும் மாநிலத்தின் பங்கு, இதர வரி மற்றும் கட்டணங்கள், வரி அல்லாத வருவாய், மானியங்கள் மற்றும் இதர பங்களிப்புகள் ஆகியவை அடங்கும்.
வருவாய் வளர்ச்சி
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாத காலகட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருமானம் 36.4 சதவீதம் அதிகரித்து 68,638 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 50,324 கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல் மத்திய வரி விதிப்புகளில் இருக்கும் மாநிலத்தின் பங்கு 10,611.38 கோடி ரூபாயில் இருந்து 15,341.34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை
மேலும் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 18,726.32 கோடி ரூபாயாகவும், வருவாய் பற்றாக்குறை 4,184.10 கோடி ரூபாயாகவும் உள்ளது.இதே வேளையில் 2023 நிதியாண்டின் முதல் பாதியில் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் உபரி நிதியை பெற்றுள்ளதாக மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் ஆய்வறிக்கை கூறுகிறது.
நிதி பற்றாக்குறை
இந்தியாவின் பெரிய பொருளாதார மாநிலங்களாக இருக்கும் கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவை மிகச் சிறிய அளவிலான நிதி பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளன, அதாவது பட்ஜெட் மதிப்பீடுகளில் 30% க்கும் குறைவான அளவீட்டையே பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஏற்கனவே 2023 முதல் பாதியில் தங்கள் முழு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்குகளை மீறியுள்ளது.