உலகளவில் செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தென் கொரிய நிறுவனங்கள் பல நூறு பில்லியன் டாலரை சிப் தயாரிப்பில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், மத்திய அரசும் இந்தியாவில் புதிய செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்பிரிவுக்காகப் பிரத்தியேகமாக PLI திட்டத்தை அறிவித்தது.
இதன் வாயிலாகப் பல நிறுவனங்கள் அடுத்தடுத்து செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் இத்துறையில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு நிறுவனம் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் நாட்டிலேயே முதலாவதாக இஸ்ரேல் நாட்டின் ISMC நிறுவனத்தின் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் உருவாக்கப்படும் சிப் தொழிற்சாலை திட்டத்தைப் பெற்றது. தமிழ்நாட்டு உடனான போட்டியில் இத்திட்டத்தின் மூலம் ஒரு படி கர்நாடகா முன்னேறியுள்ளது என்றால் மிகையில்லை.
மகாராஷ்டிரா
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வரும் எனப் பெரிய அளவில் நம்பப்பட்ட பாக்ஸ்கான் - வேதாந்தா கூட்டணியில் 1.6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சிப் தொழிற்சாலையைக் கடைசி நேரத்தில் மகாராஷ்டிரா கைப்பற்றியது. இத்திட்டத்திற்காகத் தமிழ்நாட்டு அரசின் நோடல் ஏஜென்சியான கைடென்ஸ் அமைப்புப் பாக்ஸ்தான் தலைவர் மற்றும் அதிகாரியை டெல்லியில் நேரடியாகச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு - Polymatech
தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனமான Polymatech சிப்செட் தயாரிப்பு மற்றும் பேகேஜிங் தளத்திற்காகத் தமிழ்நாட்டில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
1 பில்லியன் டாலர் முதலீடு
Polymatech நிறுவனத்தின் தலைவரான நந்தம் ஈஸ்வர ராவ் இந்த 1 பில்லியன் டாலர் முதல் கட்ட திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 250 மில்லியன் சிப் தயாரிக்கப்படும் எனத் திட்டமிட்டு உள்ளார். மேலும் Polymatech மத்திய அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் பெற PLI திட்டத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
PLI திட்டதத்தின் கீழ் Polymatech முதல் கட்ட முதலீடு திட்டத்திற்கான in-principle approval பெற்றுள்ளது. இந்தக் கட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் Polymatech புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து சுமார் 130 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு உடன் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.
மத்திய அரசு
Polymatech அடுத்தச் சில வாரத்தில் அமைக்கப்படும் சிப்செட் தயாரிப்பு மற்றும் பேகேஜிங் தளத்தின் வாயிலாக விரைவில் சிப் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் மத்திய அரசிடம் சிப் உற்பத்தி, அசம்பிளி, டெஸ்டிங் மற்றும் பேகேஜிங் திட்டத்திற்காக உலகில் பல நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.