தமிழ்நாட்டின் கடன் அளவு 2022-21 ஆம் நிதியாண்டில் 22.43 சதவீதம் உயர்ந்து 5, 18,796 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் அறிக்கையைப் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு தனது வருவாய் செலவினங்களுக்குப் போதுமான நிதியைத் திரட்ட மூலதன ரசீதுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாநில அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க சிஏஜி அமைப்பின் அறிக்கை தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதேபோல் தமிழ்நாடு நிதி பொறுப்பு சட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடையவும் பரிந்துரைத்துள்ளது.
மூலதன செலவினங்கள்
2022-21 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மூலதன செலவினங்களின் அளவு 36,902 கோடி ரூபாய், இதைச் சமாளிக்க மாநில அரசு வாங்கிய கடன்கள் மூலம் நிதியியல் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கடன் அளவு 22.43 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடன் - உள்நாட்டு உற்பத்தி விகிதம்
இதேபோல் கடன் - மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் 26.94 சதவீதமாக உள்ளது. இது Tamil Nadu Fiscal Responsibility Act 2003 விதிகளின் படி 25.20 சதவீதமாக இருக்க வேண்டும், இந்த இலக்கை அடைய வேண்டும் என்பதைத் தான் இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் அறிக்கையைப் பரிந்துரைத்துள்ளது.
இதர கடன்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்கப்பட்ட 633.99 கோடி ரூபாய் கடனையும் சேர்த்தால் கடன் - மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் 27.30 சதவீதமாக இருக்கும் எனவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருவாய் பற்றாக்குறை
மேலும் வருடாந்திர வருவாய் பற்றாக்குறை அளவு 2016-17ல் 12,964 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டில் இதன் அளவு 62,326 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் வருடாந்திர வருவாய் பற்றாக்குறை அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் TNFR இலக்கான 25.20 சதவீதத்தை அடைவது மிகவும் கடினம்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு தனது வருவாய் பற்றாக்குறையைத் தீர்க்கக் கூடுதலான வருவாய் ஈர்க்கும் வழிகளையும், முறைகளையும், பிரிவுகளையும் கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை மக்கள் நலனுக்கான அறிவித்தால் நிதிநிலையைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.