இந்தியாவினை பொறுத்தவரையில் பல பொதுத்துறை நிறுவனங்களும் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகின்றன. முன்னதாக ஏர் இந்தியா கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த நிலையில், தனியார்மாக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு திட்டமிட்டு வருகின்றது.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் கடும் கடன் பிரச்சனைக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருவது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கடன்
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் 370 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 4 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் 1,555 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சேலம் போக்குவரத்து கழகம்
சேலம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் 221 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 11 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது இதன் கடன் தொகை சுமார் 2172 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் போக்குவரத்து கழகம்
இதே விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் கடன் விகிதமானது, கடந்த 2011ல் 227 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 10 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. தற்போது கடன் தொகை சுமார் 2,247 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மதுரை நிலவரம் என்ன?
மதுரை போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.266 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2178 கோடியாக உயர்ந்து உள்ளது.
கும்பகோணம் நிலவரம்?
கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் 339 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது கடன் தொகை சுமார் 2,478 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னை நிலவரம்
இதே சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கடன் விகிதமானது, கடந்த 2011ல் 586 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் 2,695 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.