மே 10-ம் ஆம் தேதி அன்று விஜய், முதல்வர் பதவி ஏற்றதிலிருந்து தமிழக மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு எதிர்பார்ப்பு மதுவிலக்கு. அதற்கு ஏதுவாக ஆட்சி மாற்றம் வந்ததுமே முதல்வர் விஜய் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றுக்கு 500 மீட்டர் தொலைவில் இருக்கும் மது கடைகளை மூடுமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் அதிகாரிகள் சுமார் 717 மதுகடைகள் இதுபோன்ற இடங்களில் இருந்து கொண்டு மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்தனர். கண்டறியப்பட்ட மதுக் கடைகளை மூடுவதற்கு மே 26-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தரவின் பேரில் ஏற்கனவே இது போன்ற இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் 281 கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அரசு அறிவித்த காலகடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கூடுதலாக தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே.விக்னேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த பிற அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விக்னேஷ் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அப்போது இதுவரையில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த 436 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன என்றும், மீதமுள்ள 281 கடைகளை வரும் மே 26-ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலனை பாதுகாக்க, அவர்களை அருகில் இருக்கும் பிற கடைகளில் பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அமைச்சர் விக்னேஷ் மேலும் சில அதிரடி விஷயங்களையும் தெரிவித்தார். அந்த வகையில் 717 கடைகளைத் தவிர்த்து இயங்கிக் கொண்டிருக்கும் மீதமுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை இரவு 10 மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூட திறந்து வைக்க கூடாது என்றும், MRP விலைக்கு மேல் கூடுதல் விலையிலும் விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். அப்படி விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயத்தின் விற்பனை அதிகரிக்கும் என்பதால் மற்றொரு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.கார்த்திகா கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் அதை விற்பனை செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஒரு வேளை இது போன்ற விஷயங்களுக்கு யாரேனும் உடன்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications