டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்வது மூலம் 2003ஆம் ஆண்டில் இருந்து இப்பிரிவில் தமிழக அரசு மிகப்பெரிய ஆதிக்கம் செய்தாலும், மதுபான விற்பனையில் சுமார் 50 சதவீத கலால் வரி வருமானத்தைத் தமிழக அரசு இழந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபான வியாபாரத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்துவது மட்டும் அல்லாமல் வரி ஏய்ப்புச் செய்யப்படும் வழிகளையும், வருவாய் இழக்கும் ஓட்டைகளையும் விரைவில் அடைக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்
தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் டாஸ்மாக் விற்பனை மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.33,811 கோடி வரி செலுத்தியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட 5.1 கோடி கேஸ்கள் ஐஎம்எஃப்எல் (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்) மற்றும் பீர் ஆகியவை டாஸ்மாக் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
10 கோடி மதுபான பெட்டிகள்
ஆனால் 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 67,622 கோடி ரூபாய் வரி வருமானம் ஈட்டக்கூடிய 10 கோடிக்கும் அதிகமான மதுபான பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 50 சதவீத தொகை அரசுக்குச் செலுத்தப்படாமல் வரி ஏய்ப்பு மற்றும் வருமான லீக்கேஜ் ஆகியுள்ளது.
கள்ள சந்தை விற்பனை
கள்ள சந்தை விற்பனை மூலம் சுமார் 50 சதவீதம் வரையிலான வருமான இழப்பு தமிழக அரசு சந்தித்துள்ளதைப் பார்க்கும் போது அரசியல்வாதிகள், காவல்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரகம், டாஸ்மாக் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்குக் கட்டாயம் தெரியாமல் இருக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது.
கடத்தல்
இந்தக் கள்ள சந்தை விற்பனையில் சட்டவிரோத இயங்கும் மதுபான ஆலைகள் மற்றும் டிஸ்டில்லரிகளால் தயாரிக்கப்படும் மதுபானம், கொள்ளையர்களால் தயாரிக்கப்படும் சாராயம், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கடத்தப்படும் மதுபானம் ஆகியவையும் அடங்கும் எனத் தெரிகிறது.
5402 டாஸ்மாக் கடைகள்
தமிழ்நாட்டில் மொத்தம் 5402 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது, இதில் ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 110 முதல் 120 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. 2017-18ஆம் நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் 26,797.96 கோடி ரூபாயாகப் பெற்ற வரி வருமானம் 2022-21ல் 33,811.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
1.65 லட்சம் வழக்குகள்
ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.95 லட்சம் லிட்டர் அர்ராக், 75,720 லிட்டர் ரெக்டிஃபைட் ஸ்பிரிட் மற்றும் 17.53 லட்சம் ஐஎம்எஃப்எல் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாகச் சுமார் 1.65 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
30000 கோடி ரூபாய்
இந்தப் பிரச்சனையைச் சரி செய்வதன் வாயிலாக எவ்விதமான கட்டண உயர்வோ அல்லது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்காமல் சுமார் 30000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருமானத்தைப் பெற்ற முடியும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்குப் பெரிய அளவில் பயன்படும்.