தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் வேளையில், மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மீண்டும் தங்களது வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
இதேவேளையில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இந்த ஊரடங்கு தளர்வு காலத்தில் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக மளிகைக் கடைகள் முதல் ஹோட்டல்கள் வரையில் அனைத்திற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தளர்வுகளில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன்-க்குப் பின்
லாக்டவுன்-க்கு பின்பு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் தமிழ்நாட்டில் மதுபான விற்பனை தாறுமாறாக உயர்ந்துள்ளது. முதல் நாளிலேயே சுமார் 164.87 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மக்கள் மத்தியில் பீதி
ஒரு பக்கம் கொரோனா எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் மறுபுறம் மதுபானம் விற்பனை அதிகரிப்பது மூலம் மக்கள் கூடுவது அதிகரிக்கும். இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
11 மாவட்டங்களில் மூடல்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் சலூன் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. ஆயினும் மதுபான விற்பனை 164.87 கோடி ரூபாய்க்குச் செய்யப்பட்டு உள்ளது.
டாப் 3 மாவட்டங்கள்
நேற்றைய விற்பனையில் மதுரை மாவட்டம் தான் மதுபான விற்பனையில் டாப். மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 49.54 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் 42.96 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 33.65 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்பு
டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து ராமதாஸ், சீமான், வானதி சீனிவாசன் எனப் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதில் பாமக தலைவர் ராமதாஸ் மதுநீதிச் சோழன் வாழ்க எனக் கிண்டல் செய்யும் வகையில் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டாஸ்மாக் திறப்பு
ஆனால் டாஸ்மாக் திறக்கப்படுவதன் மூலம் பல திருட்டு மற்றும் கடத்தல் மதுபானங்கள் வருவதையும், கள்ள சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும். 2020 லாக்டவுனில் கள்ளச் சாராயம் காய்ச்சி போலிஸிடம் சிக்கியவர்கள் எண்ணிக்கை ஏராளம்.
மது அருந்துவது முற்றிலும் தவறானது என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.