என்னப்பா எல்லாரும் படையா கிளம்பிட்டீங்க.. டாடா, ரிலையன்ஸ், அதானி, ஏர்டெல்..!!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களான டாடா, ரிலையன்ஸ், அதானி, பாரத் ஏர்டெல் ஆகியவை ஒரே நேரத்தில் பெரும் தொகையை டேட்டா சென்டர் துறையில் முதலீடுகளைச் செய்வதை எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள். கிரீன் எனர்ஜி துறையின் முக்கியதுவம் அதிகரித்த போது இந்தியாவில் சோலார் எனர்ஜி துறையில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அடித்து பிடித்து முதலீடுகளை செய்தது நினைவிருக்கும், இதேபோன்ற தருணம் தான் தற்போது டேட்டா சென்டர் துறையில் உருவாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் உலக செயல்பாட்டை மாற்றும் என கூறப்படும் வேளையில், நாட்டின் பெரும் நிறுவனங்களின் இந்த ஈடுபாடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AI மற்றும் கிளவுட் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக கிகாவாட் அளவிலான டேட்டா சென்டர் வசதிகள் இந்தியாவில் மிகவும் அவசியமானதாக மாறி வருகிறது. இதற்கான டிமாண்ட்-ம் அதிகமாக இருக்கும் வேளையில் டாடா, ரிலையன்ஸ், அதானி, பாரத் ஏர்டெல் ஆகியவை ஹைப்பர்ஸ்கேலர் எனப்படும் மிகப்பெரிய டேட்டா சென்டர்களை உருவாக்க முடிவு செய்துள்ளன. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இது இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னப்பா எல்லாரும் படையா கிளம்பிட்டீங்க.. டாடா, ரிலையன்ஸ், அதானி, ஏர்டெல்..!!

TCS-TPG கூட்டணி:
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) தனது ஆஸ்தான ஐடி சேவை துறையில் இருந்து மாறுப்பட்டு முதல் முறையாக புதிய வர்த்தகத்தில், அதுவும் வெளிநாட்டு நிறுவன கூட்டணியுடன் இறங்கியுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனமான TPG-உடனான கூட்டணியில் 18,000 கோடி ரூபாய் (சுமார் 2.1 பில்லியன் டாலர்) செலவில் 1.2 GW தளத்தை உருவாக்குகிறது. இதற்காக ஹைப்பர்வால்ட் AI டேட்டா சென்டர் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது இக்கூட்டணி. இது இந்தியாவில் உள்ள அனைத்து டேட்டா சென்டர்களின் தற்போதைய மொத்த திறனுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி-கூகிள் கூட்டணி:
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கூகிள் நிறுவனத்துடன் இணைந்து 15 பில்லியன் டாலர் (சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய்) முதலீட்டில் விசாகப்பட்டினத்தில் 1 GW AI டேட்டா சென்டரை அமைக்கிறது. இது 2026 முதல் 2030 வரை 5 ஆண்டுகளில் நிறைவடையும். ஆந்திர அரசு அறிவிப்பின்படி, இந்த டேட்டா சென்டர் மூலம் 5,000-6,000 நேரடி வேலைவாய்ப்புகளையும் 20,000-30,000 மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

அதானி கானெக்ஸ் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும், இது கூகுளின் அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் மிகப்பெரிய AI தளமாகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே ஜாம்னகரில் 1 GW AI டேட்டா சென்டரை அமைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. இப்போது விசாகப்பட்டினத்தில் 1 GW டேட்டா சென்டருக்கு 11 பில்லியன் டாலர் அதாவது 92,000 கோடி ரூபாய் தொகையை அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

கனடாவின் புருக்ஃபீல்ட் மற்றும் அமெரிக்காவின் டிஜிட்டல் ரியாலிட்டி ஆகியவற்றுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணி சேர்ந்து இந்த மாபெரும் டேட்டா சென்டரை அமைக்கிறது. ஆந்திர அரசு நவம்பர் 26 அன்று இந்த திட்டத்தை உறுதிப்படுத்தியது.

பாரத் ஏர்டெல்:
பாரத் ஏர்டெல் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்றாலும், நீண்ட காலமாக இத்துறையில் இருந்து வருவது மூலம், ஏர்டெல் தனது நக்ஸ்ட்ரா டேட்டா மூலம் இந்திய டேட்டா சென்டர் சந்தையில் 15% பங்கைப் வைத்துள்ளது. ஜெஃப்ரீஸ் அறிக்கையின்படி, 2030-க்குள் ஏர்டெல், ரிலையன்ஸ், அதானிகானெக்ஸ் ஆகிய மூன்றும் சந்தையின் 35-40% திறனை கைப்பற்றும் என கணித்துள்ளது.

50 பில்லியன் டாலர் முதலீடு:
ஜெஃப்ரீஸ் மற்றும் JLL அறிக்கைகளின்படி, அடுத்த 5-7 ஆண்டுகளில் சர்வதேச ஹைப்பர்ஸ்கேலர்கள் நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் சுமார் 50 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்தியாவில் முதலீடு செய்யும். தற்போதைய 1 GW திறன் 2030-க்குள் 8-9 GW ஆக உயரும். JLL-ன் கணிப்பின் படி 8GW டேட்டா சென்டர்களை உருவாக்க வேண்டும் என்றால் குறைந்தது 30 பில்லியன் டாலர் மூலதனம் தேவை என தெரிவித்துள்ளது.

மேலும் இதே JLL அறிக்கையின்படி, 2017-ல் இந்தியாவில் இண்டர்நெட் டேட்டா பயன்பாடு 8 எக்ஸபைட்டுகளில் இருந்து 2025-ல் 229 எக்ஸபைட்டுகளாக (1 எக்ஸபைட் = 10 பில்லியன் கிகாபைட்) உயர்ந்துள்ளது. OTT தளங்கள், ஈ-காமர்ஸ், டிஜிட்டல் பேமெண்ட்ஸ், AI பயன்பாடுகள் இதை அதிகரித்துள்ளது. இதனால் ஏஐ டேட்டா சென்டர் துறையில் யார் முதலில் முதலீடு செய்து வர்த்தகத்தை கைப்பற்றுகிறார்களோ அவர்களுக்கு ஜாக்பாட் என்ற நிலை தான் தற்போது உள்ளது.

ஏஐ நிறுவனங்கள்
உலகளாவிய ஏஐ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களையும், அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அளவீட்டை அதிகரிக்க வேண்டுமாயின் இந்தியா தான் முக்கிய சந்தையாக உள்ளது. இதனால் இந்தியாவில் ஒப்பன்ஏஐ, கூகுள் ஜெமினி முதல் அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய சேவையை இலவசமாக கொடுத்து வருகிறது.

இதனால் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் டேட்டா சென்டருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்த தேவையை வர்த்தக வாய்ப்பாக பார்த்துள்ள டாடா, ரிலையன்ஸ், அதானி, பாரத் ஏர்டெல் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+