டாடா குழுமம் தனது ஈகாமர்ஸ் கனவை நினைவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் நாட்டின் முன்னணி மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனமான பிக் பேஸ்கட் மற்றும் ஆன்லைன் பார்மஸி நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பிக் பேஸ்க்ட் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்யவும் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே டாடா தனது அனைத்து ரீடைல் பிரிவு வர்த்தகத்தையும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கு தயார்ப்படுத்தி வரும் நிலையில் சூப்பர் ஆப் உருவாக்கும் பணிகளை வேகமெடுத்துள்ளதாக டாடா குழுமத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிக் பேஸ்கட் - இறுதிக்கட்டம்
டாடா குழுமம் ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைய முடிவு செய்த போது முதலில் முக்கியமாக பிக் பேஸ்கட் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்திருந்த நிலையில், தற்போது இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
1.2 பில்லியன் டாலர் டீல்
தற்போது கிடைத்துள்ள தகவல் படி டாடா பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை சுமார் 1.2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டாடா தளத்தில் இணைப்பு மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்காக 200 முதல் 250 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டையும் செய்ய டாடா முடிவு செய்துள்ளது.
நுகர்வோர் இண்டர்நெட் வர்த்தகம்
டாடா - பிக் பேஸ்கட் இடையிலான ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் பிக் பேஸ்கட் சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவிலான
மதிப்பீட்டைப் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் இந்திய நுகர்வோர் இண்டர்நெட் வர்த்தக சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகத் திகழ்கிறது.
1MG கைப்பற்றும் திட்டம்
இதேபோல் டாடா ஆன்லைன் மருந்து விற்பனையில் இறங்க ஆன்லைன் பார்மஸி நிறுவனமான 1MG நிறுவனத்தில் 55 சதவீத பங்குகளை சுமார் 200 முதல் 250 மில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
சூப்பர் ஆப் பணிகள்
இதேவேளையில் டாடா தனது சூப்பர் ஆப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த சூப்பர் ஆப் மளிகை பொருட்கள் மட்டும் அல்லாமல், மருந்து, எலக்ட்ரானிக்ஸ், பேஷன், நிதியியல் சேவைகள் எனப் பல தரப்பட்ட டாடா சேவைகளை ஓரே தளத்திற்குள் இணைத்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது.
அம்பானிக்கு பாதிப்பு
ஈகாமர்ஸ் துறைக்குள் டாடாவின் வருகை பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோமார்ட் அதிகளவிலான வர்த்தக பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதை தொடர்ந்து அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற முன்னணி
ஈகாமர்ஸ் தளத்தில் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.